மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கு | வாட்ஸ்அப்பில் சிவன் படம் வைத்த ஷரீக் - சதி குறித்து தீவிர விசாரணை

ஷரீக் தனது செல்போன் வாட்ஸ் அப்பில் முகப்பு புகைப்படமாக வைத்திருந்த ஆதியோகி (சிவன்) சிலை.
ஷரீக் தனது செல்போன் வாட்ஸ் அப்பில் முகப்பு புகைப்படமாக வைத்திருந்த ஆதியோகி (சிவன்) சிலை.
Updated on
1 min read

பெங்களூரு/ கோவை: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியுள்ள முகமது ஷரீக், தனது வாட்ஸ்அப் முகப்பாக ஆதியோகி (சிவன்) படத்தை வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

கர்நாடகாவின் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் (37) காயமடைந்தார். குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷரீக், போலி ஆதார் அட்டை மூலம் சிம்கார்டு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷிமோகாவில் குண்டுவெடித்து அவர் ஒத்திகையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து மங்களூரு போலீஸாரிடம் விசாரித்தபோது, ‘‘ஷரீக் திட்டமிட்டு தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டுள்ளார். தனது வாட்ஸ்அப் முகப்பு படமாக (டிபி) ஆதியோகி சிவன் படத்தை வைத்துள்ளார். தனது பெயரை பிரேம்ராஜ், அருண்குமார் என கூறி விடுதிகளில் தங்கியுள்ளார். தமிழகத்தில் கோவை, ஊட்டி மற்றும் கேரளாவுக்கும் சென்று வந்துள்ளார்’’ என்றனர்.

மங்களூரு மாநகர காவல் ஆணையர் சசிகுமார் கூறும்போது, ‘‘ஷரீக்குடன் தொடர்பில் இருந்த 4 பேரை விசாரித்து வருகிறோம். அதில் 2 பேர் மைசூருவை சேர்ந்தவர்கள். ஒருவர் மங்களூரு, மற்றொருவர் ஊட்டியை சேர்ந்தவர்'' என்றார்.

கோவை கோட்டைமேட்டில் கடந்த அக்.23-ம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்புடன் இதற்கு தொடர்பு இருக்குமோ என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சதி பற்றி விசாரிக்க மங்களூருவில் இருந்து கோவை வந்த தனிப்படை போலீஸார் நேற்று என்ஐஏ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

கோவை மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள விடுதியில் (மேன்ஷன்) ஷரீக் கடந்த செப்டம்பரில் 3 நாட்கள் தங்கியுள்ளார். தனது பெயரை பிரேம்ராஜ் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அப்போது, அங்கு சிசிடிவி இல்லாததால், சுற்றுப் பகுதியில் உள்ள சிசிடிவிக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஷரீக், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளராக இருக்கலாம் என்று தெரிகிறது. வெடிபொருட்களை ஆன்லைனில் வாங்கியுள்ளார். என்ஐஏ அதிகாரிகளால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் அப்துல் மதீன் தகா, அரபாத் அலி ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளார்’’ என்றனர்.

ஷரீக், கோவையில் தங்கியிருந்தபோது, ஆதியோகி சிலையை பார்க்க சென்றாரா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு ஷரீக் வந்ததாக தகவல் கிடைத்துள்ளதால், கட்ராபாளையம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in