Published : 21 Nov 2022 05:58 PM
Last Updated : 21 Nov 2022 05:58 PM

ஆதிவாசிகள் முன்னேறுவதை பாஜக விரும்பவில்லை: குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் சாடல்

சூரத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

சூரத்: ஆதிவாசிகள்தான் நமது நாட்டின் முதல் உரிமையாளர்கள் என தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஆனால் அவர்கள் முன்னேறுவதை பாஜக விரும்பவில்லை என்று குற்றம்சாட்டினார்.

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இன்று குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இன்று முதல் முறையாக குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சூரத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி நிகழ்த்திய உரை: “நான் மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஏராளமான மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று வருகின்றனர். இந்த நாட்டில் இருந்து வெறுப்பை அகற்றும் நோக்கிலேயே இந்த யாத்திரையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

இந்த யாத்திரையின்போது, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஆதிவாசிகளைச் சந்தித்துப் பேசினேன். அப்போது அவர்கள் அனுபவித்து வரும் வலியை நான் உணர்ந்தேன். ஆதிவாசிகள்தான் நமது நாட்டின் முதல் உரிமையாளர்கள். ஆனால், பாஜக அவர்களை வனவாசி என அழைக்கிறது. அவர்களின் நிலங்களை அவர்களிடம் இருந்து பறித்து 2-3 தொழிலதிபர்களுக்கு பாஜக கொடுத்துவிட்டது. ஆதிவாசிகள் மாநகரங்களில் வாழ்வதையோ, அவர்கள் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பெறுவதையோ பாஜக விரும்பவில்லை” என்று ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x