Last Updated : 21 Nov, 2016 08:41 AM

 

Published : 21 Nov 2016 08:41 AM
Last Updated : 21 Nov 2016 08:41 AM

உத்தரப் பிரதேசத்தில் இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியது: ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு 145 பேர் பலி

200-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தூர் - பாட்னா விரைவு ரயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் தடம்புரண்டதில், அதில் பயணம் செய்த 145 பேர் பலியாயினர். இவற்றில் 120 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட சடலங்களில் 97 சடலங்கள் தகுந்த ஆய்வுக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் பாதி பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து பிஹார் மாநிலம் பாட்னாவை நோக்கி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 3 மணியளவில் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் புக்ரயான் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த இந்த ரயிலின் 14 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று மீட்புப் பணி யில் ஈடுபட்டனர். ராணுவ மருத்து வர்கள், ரயில்வே அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எப்), மாநில போலீஸார் உள்ளிட்டோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணிகள் குறித்து காவல் துறை ஐஜி (கான்பூர் சரகம்) ஜகி அகமது கூறும்போது, “இதுவரை 120 பேரின் சடலங்கள் மீட்கப்பட் டுள்ளன. மேலும் 200-க்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்தனர். இவர் கள் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்றார்.

விபத்து நடந்தபோது பயங்கர சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட பயணிகள் உறவினர்களைத் தேடினர். பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். படுகாயமடைந்த பலர் உதவி கோரி கூச்சல் போட்டனர். இதனால் அப் பகுதி போர்க்களம் போல காட்சி அளித்தது.

மொத்தம் 14 பெட்டிகள் தடம் புரண்ட போதிலும் எஸ்1, எஸ்2, எஸ்3, எஸ்4 ஆகிய 4 பெட்டிகள் (சாதாரண தூங்கும் வசதி) மிகவும் மோசமாக சேதமடைந்தன. குறிப்பாக, எஸ்1 மற்றும் எஸ்2 பெட்டிகளில் பயணம் செய்தவர்கள்தான் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர். ஏசி 3 அடுக்கு பெட்டி ஒன்றும் சேதமடைந் தது. எனினும் இதில் உயிரிழப்பு மிகவும் குறைவாக இருந்தது.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தங் கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை ரயில்வே துறை செய்து வருகிறது.

தண்டவாளத்தில் விரிசல்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "விபத்தில் காய மடைந்தவர்களுக்கு சிகிச்சை செலவை ரயில்வே ஏற்றுக்கொள் ளும். தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலே இந்த விபத்துக்குக் காரண மாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக சம்பவம் நடந்த பகுதி (கான்பூர்-ஜான்சி) வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.

விசாரணைக்கு உத்தரவு

சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்ட ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, “மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்துவார்” என்றார்.

பிரணாப், மோடி இரங்கல்

இந்த விபத்தில் பலியானவர் களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரூ.10.5 லட்சம் நிவாரணம்

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப் படும் என பிரதமர் மோடி அறி வித்துள்ளார். இதேபோல, ரயில்வே சார்பில் முறையே, ரூ.3.5 லட்சமும் ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி. அரசு சார்பில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும் படுகாயமடைந்தவர் களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என உ.பி. அரசு அறிவித்துள்ளது.

இதுதவிர விபத்தில் பலியான தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர் களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்குமாறு உ.பி. காவல் துறை தலைவருக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த ரயிலில் பயணம் செய்தவர்கள் பற்றிய விவரத்தை தொலைபேசி மூலம் தெரிந்து கொள்வதற்காக இலவச உதவி எண்களை ரயில்வே அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x