Published : 19 Nov 2022 04:58 AM
Last Updated : 19 Nov 2022 04:58 AM

நவீன இந்தியாவின் சிற்பி

ப.தங்கப்பன்

இந்திய - ரஷ்ய நாடுகளுக்கு இடையே உணர்வுப்பூர்வமான நட்புறவு நீண்டகாலமாக நீடித்து வருகிறது. இந்த நல்லுறவுக்கு அடித்தளமிட்டவர் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு. ரஷ்ய புரட்சியால் ஈர்க்கப்பட்டவர் நேரு.

சோசியலிஸ்ட் சித்தாந்தங்களிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர். அதன் தாக்கமே 1927-ம் ஆண்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தினவிழாவில் தனது தந்தை மோதிலால் உடன் நேருவை பங்கேற்க வைத்தது. மேலும், 1953-ம் ஆண்டு இந்தியா சோவியத் கலாச்சார நட்புறவு கழகத்தை உருவாக்கிய டாக்டர் ஏ.வி.பாலாகா, நேருவின் தனி மருத்துவராவார்.

இதுதவிர இந்திய தொழில்துறையில் தன்னிறைவு அடைய வித்திட்டவர் நேரு. அவரின் முயற்சியாலேயே அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் மூலம் தமிழகத்தில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டது. இதேபோல், 1955-ல் ரஷ்யா ஒத்துழைப்புடன் பிலாய் இரும்பு தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் நேருவின் முன்முயற்சியே காரணம். மேலும், முதன்முதலாக 1955-ல் இந்திய பிரதமராக தனது மகள் இந்திராவுடன் ரஷ்யாவில் பல்வேறு நகரங்களுக்கு நேரு பயணம் செய்தார்.

நான் 1986-ல் மாஸ்கோவில் படிக்கும்போது ஜார்ஜியாவுக்கு (அன்றைய சோவியத் குடியரசு) தலைநகர் ‘திபிளசி’-க்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தோம். இக்குழுவில் என்னுடன் அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாட்டினர் இருந்தனர்.அங்கு ஒரு உணவகத்துக்குச் சென்றபோது, அதன் பொறுப்பாளர் எங்களை வரவேற்று ஒவ்வொருவரைப் பற்றியும் கேட்டறிந்தார். நான் இந்தியன் என்றவுடன் அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி. உடனே தன் வீட்டுக்குச் சென்று ஒரு மிகப்பெரிய ஆல்பத்தை கொண்டு வந்து காண்பித்தார்.

அந்தப் படத்தில் 1955-ல் நேரு - இந்திரா காந்தி - ராஜ் கபூர் உடன் அவர் எடுத்துக்கொண்ட படத்தை காண்பித்து மகிழ்ந்தார். மேலும், அந்த இரவு விருந்துக்கான செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வால் என்னுடன் வந்தவெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் ஆச்சரியமடைந்தனர்.

அதேபோல், ரஷ்யா சென்று திரும்பிய நேருவை ஒருமுறை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சந்தித்தார். அப்போது, ரஷ்யாவில் தனக்கு நல்வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும், ‘அவசியம் நீங்கள் ரஷ்யா செல்ல வேண்டும்’ என்று சிவாஜியிடம் கூறினார். மேலும் ‘ரஷ்யாவில் ராஜ்கபூருக்கு பிறகு எனக்குதான் மிகப்பெரிய வரவேற்பு’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வளர்ச்சிக்கு வித்திட்டவர்: ஒரு நாட்டின் பிரதமர் திரைக்கலைஞர் மீது கொண்டுள்ள மரியாதையை எண்ணி பெருமை கொண்டதாக இந்த தகவலை சிவாஜி உணர்ச்சி பொங்க என்னிடம் தெரிவித்தார். உலக அரங்கில் இந்தியா இன்று பல்வேறு வளர்ச்சிகளை நோக்கி பயணித்தாலும் அதற்கு வித்திட்டவர் நேரு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x