Published : 17 Nov 2022 06:02 AM
Last Updated : 17 Nov 2022 06:02 AM

ரயில்வே உணவுப் பட்டியல் மாற்றம் - நீரிழிவு நோயாளிகளுக்கு சிறப்பு உணவு வழங்க ஏற்பாடு

புதுடெல்லி: ரயில்வே சேவையை மேம்படுத்தும் வகையில் பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க ரயில் நிலையங்களில் இணைய வசதி, நவீனப்படுத்தப்பட்ட தங்கும் அறைகள் உட்பட பல வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது ரயில்வே உணவுப் பட்டியலிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போதைய நடைமுறையின்படி குறிப்பிட்ட வகை உணவுகள் மட்டுமே ரயில்களில் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் உணவுப் பட்டியலில் புதிய உணவுகளைச் சேர்க்க, ரயில்வே துறையின் கீழ் இயங்கும் உணவு மற்றும் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசிக்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரையில் ரயில்களில் சப்பாத்தி, இட்லி என குறிப்பிட்ட வகை உணவுகள் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் நீரிழிவு நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான உணவுகள், உள்ளூர் உணவுகள், பண்டிகை கால உணவுகள் என பல வகையான உணவுகளை பட்டியலில் சேர்க்க ஐஆர்சிடிசிக்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

ரயில்களில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விலைக்குள் புதிய உணவு வகைகள் வழங்கப்படும் என்றும் என்னென்ன உணவுகள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை ஐஆர்சிடிசி முடிவு செய்யும் என்றும் ரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. உணவுகள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும், சரியான அளவில் உணவுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஐஆர்சிடிசிக்கு ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x