

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் டெல்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோகாவுக்குச் சென்று கொண்டிருந்த பயணி ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 9டபிள்யு 202 விமானம் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு தோகாவுக்கு புறப்பட்டது. இந்த போயிங் 737 ரக விமானத்தில் 141 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் பாகிஸ்தான் வான் எல்லையில் பறந்துகொண்டிருந்தபோது, பயணி ஒருவருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ உதவிக்காக அருகில் உள்ள கராச்சி நகருக்கு விமானம் திருப்பிவிடப்பட்டது. கராச்சி விமான நிலையத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு மருத்துவ உதவிகள் தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில் விமானம் கராச்சி வந்து சேர்ந்ததும் பயணி மரணம் அடைந்தார்.
இதையடுத்து இந்த விமானம் டெல்லி திரும்பியது. இறந்த பயணியின் உடல், முறைப்படி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பயணி குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இறந்த பயணியின் குடும்பத்துக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்த துரதிருஷ்ட சம்பவத்தால் இணைப்பு விமானங் களை தவறவிட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை திட்டமிட்டு வருவதாக ஜெட் ஏர்வேஸ் நேற்று தெரிவித்தது.