

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பழங்குடியினத் தைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக டெல்லி பல்கலைக்கழக பேரா சிரியர் நந்தினி சுந்தர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் அர்ச்சனா பிரசாத் மற்றும் சிலர் மீது கடந்த 7-ம் தேதி போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்தனர்.
இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது. அந்த வழக்கை நீதிபதிகள் எம்.பி.லோக்குர், ஆதர்ஷ் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிடும், ‘‘நந்தினி உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான போதிய ஆதாரங்கள் உள்ளன’’ என்று தெரிவித்தார்.
அப்போது, நந்தினி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசோக் தேசாய் கூறும்போது, ‘‘குற்றம் சாட்டப்பட்டுள்ள சுந்தர் உட்பட சமூக ஆர்வலர்கள் கடந்த மே மாதம் சட்டீஸ்கர் சென்று வந்தனர். ஆனால், நவம்பர் மாதம் நடந்த கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது’’ என்றார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், ‘‘நக்ஸல் பிரச்சினைக்கு அமைதியான முறையில் நடைமுறைக்கேற்ற தீர்வு காண வேண்டும்’’ என்றார்.
பின்னர் நவம்பர் 15-ம் தேதி வரை சமூக ஆர்வலர் நந்தினி சுந்தர் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று சட்டீஸ்கர் அரசு உறுதி அளித்தது. வழக்கின் அடுத்த விசாரணை 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.