Last Updated : 10 Nov, 2022 05:36 AM

 

Published : 10 Nov 2022 05:36 AM
Last Updated : 10 Nov 2022 05:36 AM

பெங்களூரு விமான நிலைய 2-வது முனையத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

பெங்களூரு: சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச‌ விமான நிலையத்தின் 2வது முனையத்தை பிரதமர் நரேந்திர‌ மோடி நாளை திறந்து வைக்கிறார்.

பெங்களூருவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி பெங்களூருவில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், ஆளுநர் மாளிகை, முக்கிய சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 5-வதும், தென்னிந்தியாவின் முதலாவது வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை சென்னை - மைசூரு இடையே நாளை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.100 கோடி செலவில் 108 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கெம்பே கவுடா சிலையை திறந்து வைக்கிறார்.

பின்னர் பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 5 ஆயிரம் கோடிசெலவில் கட்டப்பட்டுள்ள 2-வது முனையத்தை திறந்து வைக்கிறார். பெங்களூரு விமான நிலையத்தில் நெரிசலை சமாளிப்பதற்காக கட்டப்பட்டுள்ள இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்தால் பயணிகள் வருகை மற்றும் விமான சேவை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது பெங்களூரு விமான நிலையத்துக்கு ஆண்டுக்கு 2.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இந்த 2வது முனையம் திறக்கப்பட்டால் பயணிகள் வருகை 5 முதல் 6 கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த முனையத்தில் நீர் மறுசுழற்சி, சூரிய மின்சக்தி, கட்டுப்படுத்தப்பட்ட மின் பயன்பாடு போன்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முனையம் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்தி இயங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகளுடன் பூங்கா நகரத்தை பிரதிபலிக்கும் வடிவமைப்பில் அழகுற கட்டப்பட்டுள்ளது. இந்த முனையத்தில் சுவர் தோட்டம், தொங்கும் தோட்டம், வெளிப்புறதோட்டம் உள்ளிட்டவை உள்நாட்டு நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ராமாயணம், மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் தாவரங்கள் இதில் நடப்பட்டுள்ளன. இந்த முனையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் பூங்காவில் உலவுவது போன்ற உணர்வை பெறுவார்கள் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை திறக்கப்பட இருக்கும் விமான நிலையத்தின் கண்ணைக் கவரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x