

புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ஆசம் கான் (74). உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் சதார் தொகுதி எம்எல்ஏ.வாக இருந்தார்.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி, அப்போதைய ராம்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை பற்றி அவர் அநாகரிகமாகவும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பேசியதாக புகார் வந்தது. இந்த வழக்கை விசாரித்த ராம்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், ஆசம் கானுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதையடுத்து. எம்எல்ஏ பதவியிலிருந்து ஆசம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆசம் கான் சார்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆசம் கான் விஷயத்தில் ஏன் உத்தர பிரதேச மாநில அரசு இந்த அவசரத்தைக் காட்டியது என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உ.பி. அரசுக்காக ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் காரிமா பிரசாத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் உ.பி. அரசு, தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.