Published : 08 Nov 2022 05:43 AM
Last Updated : 08 Nov 2022 05:43 AM

10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பில் கூறியது என்ன?

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக் கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

ஐந்து நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

103 அரசியலமைப்பு சட்ட திருத்தம் சரியா, தவறா? பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சேர்க்கப்படாதது சரியா, தவறா? 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீறியது சரியா, தவறா ஆகிய 3 விவகாரங்கள் விசாரணையில் முன்வைக்கப்பட்டன. இவற்றை ஆராய்ந்து எனது தீர்ப்பை வழங்குகிறேன்.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசிய லமைப்பு சாசனத்தை எந்த வகையிலும் மீறாது. 10% இடஒதுக்கீட்டில் பொது பிரிவினர் மட்டுமேசேர்க்கப்பட்டது அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை எந்த விதத்திலும் பாதிக்காது. இதேபோல 50% இடஒதுக்கீடு வரம்பு அதிகரிக்கப்பட்டதும்அரசியலமைப்பு சாசன அடிப்படை கட்டமைப்பை பாதிக்காது. இடஒதுக்கீடு வரம்பு என்பது தளர்வுக்கு உட்பட்டது. எனவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுபிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் 103-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் செல்லும். இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.

நீதிபதி பேலா எம்.திரிவேதி வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

நீதிபதி தினேஷ் மகேஸ்வரியின் தீர்ப்போடு எனது தீர்ப்பும் ஒத்துப் போகிறது. மக்களின் தேவை, பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டே 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதில் சமநிலை கோட்பாடு எந்த வகையிலும் மீறப்படவில்லை.

நாடு சுதந்திரம் அடைந்தபோது பழங்கால சாதிய நடைமுறையை கருத்தில் கொண்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது நாடுசுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்ஆகின்றன. இந்த நேரத்தில் இடஒதுக்கீடு நடைமுறை குறித்து மறுஆய்வு செய்வது அவசியம்.இவ்வாறு அவர் தீர்ப்பில் கூறியுள்ளார்.

நீதிபதி ஜே.பி.பர்திவாலா அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, நீதிபதி பேலா எம்.திரிவேதியின் தீர்ப்புகளை ஆமோதிக்கிறேன்.சமூக, பொருளாதார சமநிலையை உறுதிப்படுத்தவே இடஒதுக்கீடு நடைமுறை கொண்டுவரப்பட்டது. பிற்படுத்தப்பட் டோரில் முன்னேறிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க தேவையில்லை. அப்போதுதான் தேவையுள்ளோர் இடஒதுக்கீட்டின் பலனை பெற முடியும். இன்றைய காலத்துக்கு ஏற்ற வகையில் இடஒதுக்கீடு இருக்க வேண்டும்.

மிக நீண்ட காலத்துக்கு இடஒதுக்கீடு நடைமுறையை பின்பற்றக்கூடாது. இதனால் இடஒதுக்கீட்டை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 103-வதுஅரசியலமைப்பு திருத்தம் செல்லும் என தீர்ப்பளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x