Published : 13 Jul 2014 10:00 AM
Last Updated : 13 Jul 2014 10:00 AM
மங்கள்யான் விண்கலம் இன்னும் 75 நாட்களில் தனது இலக்கை வெற்றிகரமாக அடையும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 'மங்கள்யான்' விண்கலத்தை விண்ணில் ஏவினர். இதுகுறித்து இஸ்ரோ சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பூமியில் இருந்து 680 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட 'மங்கள்யான்' விண்கலம், தற்போது 525 மில்லியன் கி.மீ. தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. ஒரு வினாடியில் 28 கி.மீ. தூரத்தை கடக்கும் மங்கள்யான் விண்கலம், இதுவரை தனது இலக்கை நோக்கி 80 சதவீத பயணத்தை முடித்துள்ளது.
மங்கள்யான் விண்கலம் கடந்த ஜூன் 11-ம் தேதி புதிய சுற்றுவட்ட பாதையில் இணைந்தது. அதனைத் தொடர்ந்து மங்கள்யானில் பொருத்தப்பட்டுள்ள முக்கிய கருவிகளை இயக்கும் பணியை இஸ்ரோ அலுவலகத்தில் இருந்தவாறு விஞ்ஞானிகள் 16 வினாடிகளில் செய்து முடித்தனர். இதேபோல ஆகஸ்ட் மாதம், முதல் வாரத்தில் மங்கள்யான் விண்கலம் மற்றொரு பாதையில் இணைந்து முக்கிய கட்டத்தை எட்டவிருக்கிறது.
அதற்கான பணிகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி செய்து முடிக்க உள்ளனர். மங்கள்யான் விண்கலம், இன்னும் 75 நாட்களில் அதாவது செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தை வெற்றிகரமாக சென்றடையும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT