Published : 07 Nov 2022 11:45 AM
Last Updated : 07 Nov 2022 11:45 AM

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆயினும் இந்த வழக்கில் 5ல் இரு நீதிபதிகள் செல்லாது என மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 5ல் 3 பேர் செல்லும் எனக் கூறியதால் சட்டம் செல்லத்தக்காகியுள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்றும் நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர். 3 2 என்ற வீதத்தில் வெளியாகியுள்ள இந்த தீர்ப்பு அரசுக்கு வெற்றியாகவே கருதப்படுகிறது. 2019 மக்களவை தேர்தலை ஒட்டி மத்திய அரசு இந்த சட்டத்தைக் கொண்டுவந்தது. இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதோடு அரசுக்கு வெற்றியாகவே கருதப்படுகிறது.

வழக்கு பின்னணி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. குறிப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு முறை என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை அமைவதாக கூறி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது தினேஷ் மகேஸ்வரி, பெலா திரிவேதி, பர்திவாலா ஆகியோர் 10% இட ஒதுக்கீடு செல்லும் என அறிவிக்க தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதி ரவீந்திர பட் மற்றும் செல்லாது என அறிவித்தனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறியுள்ளதா? இட ஒதுக்கீடு என்பது எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய கோட்பாட்டை மீறுகிறதா? இட ஒதுக்கீடு என்பது மதிப்பெண் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கிறதா? போன்ற எழுந்த நிலையில், "10 சதவீத இட ஒதுக்கீடை ஆதரித்த நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, அனைவரும் இலக்குகளை அடைய இட ஒதுக்கீடு தேவையான கருவியாக இருக்கிறது. இது சமத்துவத்திற்கு எதிரானதாக அமையவில்லை" என்று கூறியுள்ளார். அதேபோல் நீதிபதி பர்திவாலாவும் இட ஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளார். "சமூகத்தில் ஒரு நபர் பின் தங்கிப் போக காரணமான அனைத்துமே கலையப்பட வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த நீதிபதி ரவீந்திர பட், "பொருளாதார ரீதியான பின்னடைவு தான் இந்த குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டின் முதுகெலும்பாக இருக்கும் போது இதில் பட்டியலினம், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விடுத்து மேற்கொள்ளப்பட்ட திருத்தம் அரசியல் சாசன ரீதியாக ஏற்புடையதல்ல. அனுமதிக்கதும் அல்ல" என்று கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித்தும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தெரிவித்துள்ளார். தீர்ப்பு நேரலையில் ஒளிபரப்பானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x