Published : 04 Nov 2022 04:28 AM
Last Updated : 04 Nov 2022 04:28 AM

சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் | சதாப்தியைவிட 30 நிமிடம் முன்பாக செல்லும் - தென்மேற்கு ரயில்வே அட்டவணையில் தகவல்

சென்னை: சென்னையிலிருந்து மைசூருக்கு இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயிலின் காலஅட்டவணை தென்மேற்கு ரயில்வே சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயில், சதாப்தி ரயிலைவிட 30 நிமிடம் முன்னதாக மைசூரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது அதிநவீன வசதிகளுடன் கூடிய 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வரிசையில் 5-வது வந்தே பாரத் ரயில் சேவை சென்னை-மைசூர் இடையே நவ.11-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில், கர்நாடக மாநிலம் பெங்களூரு வழியாக மைசூரை அடையும். இந்த ரயிலைத் தயாரிக்கும் பணி சென்னை ஐ.சி.எஃப்-ல் நடைபெற்று வருகிறது. இந்த ரயில் தென்னிந்தியாவின் முதலாவது வந்தே பாரத் ரயிலாகும்.

வாரத்தில் 6 நாட்கள் இயக்கம்: இந்நிலையில், இந்த ரயிலின் கால அட்டவணை குறித்த தகவல் தென்மேற்கு ரயில்வேயில் அண்மையில் வெளியானது. அதன்படி, இந்த ரயில் புதன்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.50 மணிக்கு வந்தே பாரத் ரயில் (எண். 20607) புறப்பட்டு, பெங்களூரு நகரை காலை 10.25 மணிக்கு சென்றடைகிறது. பின்னர், பெங்களூருவிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 12.30 மணிக்கு மைசூரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைசூருவிலிருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (எண்.20608), பெங்களூரு நிலையத்தை பிற்பகல் 2.55 மணிக்கும், சென்னை சென்ட்ரலை இரவு 7.35 மணிக்கும் வந்தடையும்.

சென்னை-மைசூரு இடையிலான 504 கி.மீட்டர் தொலைவை, மணிக்கு 75.6 கி.மீ. வேகத்தில், 6 மணி நேரம் 40 நிமிடத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கிறது. தெற்கு ரயில்வே பகுதியில் மணிக்கு 80.25 கி.மீ. வேகத்திலும், தென்மேற்கு ரயில்வே பகுதியில் மணிக்கு 72.50 வேகத்திலும் ரயில் இயக்கப்பட உள்ளது.

மணிக்கு 180 கி.மீ. வேகம் வரை இயக்குவதற்கு வந்தே பாரத் ரயில் தகுதியுடையதாக இருந்தாலும், சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் அருகருகே அமைந்துள்ள லெவல் கிராசிங்குகள், ரயில் வழித்தடங்களை ஒட்டி பல இடங்களில் தடுப்புச் சுவர் கட்டப்படாமல் இருப்பது, நகரப் பகுதிகள் அதிகம் இருப்பது போன்ற காரணங்களால், மணிக்கு 75.6 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகத்தை அதிகரிக்க வேண்டும்: சென்னையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் சதாப்தி விரைவு ரயில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலைக் காட்டிலும் பெங்களூருக்கு 20 நிமிடம் முன்பாகவும், மைசூருக்கு சதாப்தி ரயிலைக் காட்டிலும் 30 நிமிடம் முன்பாகவும் மட்டுமே சென்றடைகிறது. ஆனால் சதாப்தி ரயிலைக் காட்டிலும் வந்தே பாரத் ரயிலுக்கான பயணக் கட்டணம் அதிகம் என்பதால், வந்தே பாரத் ரயில் சேவை வணிக ரீதியாக வெற்றி பெற அதன் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மைசூரு-சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பெங்களூரு நகரில், வரும் 11-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். வந்தே பாரத் ரயிலின் அதிகாரப்பூர்வ பயண அட்டவணை தெற்கு ரயில்வே சார்பில் தற்போது வரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x