Published : 03 Nov 2022 07:30 PM
Last Updated : 03 Nov 2022 07:30 PM

எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதில் இந்தியா புதிய உச்சம் தொட்டுள்ளது: டிஆர்டிஓ தலைவர்

டி.ஆர்.டி.ஓ தலைவர் சமிர் காமத்

புதுடெல்லி: எதிரி ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிப்பதில் இந்தியா புதிய உச்சம் தொட்டிருப்பதாக டி.ஆர்.டி.ஓ தலைவர் சமிர் காமத் தெரிவித்துள்ளார்.

5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் AD-1 ஏவுகணை சோதனை, ஒடிசா கடற்பகுதியில் நேற்று நடத்தப்பட்டு, சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுடெல்லியில் இன்று (நவ. 3) செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஓ -வின் தலைவர் சமிர் காமத் கூறியதாவது: “2 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை சோதனை ஏற்கெனவே வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து, 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் AD-1 ஏவுகணை சோதனை ஒடிசா கடற்பகுதியில் நேற்று நடத்தப்பட்டது. இந்த சோதனையும் வெற்றி பெற்றுள்ளது.

அதிக உயரத்தில் பறக்கும் ஏவுகணை மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் ஏவுகணை என இரண்டு வகையான ஏவுகணைகளையும் இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது AD-1 ஏவுகணை. இதன்மூலம், நமது தாக்கும் திறன் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. நீர்மூழ்கி கப்பலில் இருந்தும், நீருக்கு வெளியே உள்ள தளங்களில் இருந்தும் இந்த ஏவுகணைகளை செலுத்த முடியும்” என்று சமிர் காமத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x