

சிமி தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீஸாரை கேள்வி கேட்பதும், சந்தேகிப்பதும் ஏற்புடையது அல்ல என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிமி இயக்கத் தீவிரவாதிகள் 8 பேர் திங்கள்கிழமை காலை தப்பிச் சென்றனர். அவர்களை எட்டு மணி நேரத்திற்குள் போலீஸார் சுற்றிவளைத்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 8 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய தீவிரவாதிகள் 8 பேரும் ஒரே இடத்தில் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி என நாடு முழுவதும் கேள்வி எழுந்தது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கிரண் ரிஜிஜூ, "சிமி தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீஸாரை கேள்வி கேட்பதும், சந்தேகிப்பதும் ஏற்புடையது அல்ல.
சில வீடியோ காட்சிகளை வைத்துக் கொண்டு போலீஸார் நடவடிக்கையை கேள்வி கேட்கக் கூடாது. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற நடவடிக்கைகளில் போலீஸார் கேள்விக்குள்ளாகின்றனர்.
தீவிரவாதிகளை எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினர் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லையில் தீவிரவாதிகளுக்கு படையினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினரை கேள்வி கேட்பது ஏற்புடையதல்ல. சில காட்சிகளை மட்டுமே வைத்து எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாது" என்றார்.