

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், முனுகோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாளை (3-ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ரூ.400 கோடி பேரம்: இதனையொட்டி, இத்தொகுதியில் ஆளும் டிஆர்எஸ் கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஏற்கெனவே டிஆர் எஸ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்களை பாஜ கட்சிக்கு இழுக்க தலா ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடி பேரம் பேசப்பட்டதாக 3 பேர் கைதாகி உள்ளனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று பாஜக எம்.எல்.ஏ ஈடல ராஜேந்தர் தனது மனைவி மற்றும் ஆதரவாளர்களுடன் இத்தொகுதிக்கு சென்றார். அப்போது, டிஆர்எஸ் கட்சியினருக்கும், பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பாஜக எம்எல்ஏ சென்ற கார் மீது டிஆர்எஸ் கட்சியினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு பாஜகவினரும் தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் அடிதடி நடந்தது. பின்னர் போலீஸார் தலையிட்டு, தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
பாஜக எம்எல்ஏ, அவரின் மனைவி, ஆதரவாளர்கள் ஆகியோர் மீது நடந்த தாக்குதலை மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி உட்பட பலர் கண்டித்துள்ளனர்.