குஜராத் பால விபத்து | “விரிவான விசாரணையே உடனடித் தேவை” - மோர்பியில் பிரதமர் மோடி

குஜராத் பால விபத்து | “விரிவான விசாரணையே உடனடித் தேவை” - மோர்பியில் பிரதமர் மோடி
Updated on
1 min read

மோர்பி: குஜராத் பாலம் விபத்து தொடர்பான அனைத்து அம்சங்களையும் கண்டறிய பரந்த மற்றும் விரிவான விசாரணை தற்போதைய உடனடித் தேவை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

குஜராத்தின் மோர்பியில் ஏற்பட்ட பால விபத்தை அடுத்து, அங்கு நிலவும் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருந்து அவர்கள் அனைத்து உதவிகளையும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

மீட்பு பணிகள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். விபத்து தொடர்பான அனைத்து அம்சங்களையும் கண்டறிய பரந்த மற்றும் விரிவான விசாரணையே தற்போதைய உடனடித் தேவை எனவும் பிரதமர் கூறினார். விசாரணையின் முடிவில் கிடைக்கும் முக்கிய தகவல்களிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அவற்றை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சாங்க்வி, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா, குஜராத் மாநில அரசின் தலைமைச் செயலாளர், மாநில காவல்துறைத் தலைவர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மோர்பிக்குச் செல்வதற்கு முன்பாக பால விபத்து ஏற்பட்ட பகுதிக்கு பிரதமர் நேரில் சென்றார். விபத்தில் காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உள்ளூர் மருத்துவமனைக்கும் அவர் சென்றார். மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, அவர்களது துணிச்சல் மற்றும் சேவையைப் பாராட்டினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in