

மோர்பி: குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விழந்ததில் 350க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மோர்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கேபிள் பாலம், புதுப்பிக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 26ம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது. குஜராத் புதுவருடப் பிறப்பை ஒட்டி பாலம் திறக்கப்பட்ட நிலையில், இன்று அது இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழும்போது அதில் 500க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அவர்களில் சுமார் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பூபேந்தர் படேலை தொடர்பு கொண்டு பேசி, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தீயணைப்புத் துறை என அனைத்து துறையினரையும் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், மீட்புப் பணிகளை துரிமாக மேற்கொள்ளத் தேவையான அதனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் தன்னுடன் தொலைபேசியில் பேசியதை தெரிவித்துள்ள பூபேந்திர படேல், மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இது மிகவும் துயரத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சை உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், நிலைமையை தொடர்ந்து உண்ணிப்பாக கண்காணித்து தேவையான உத்தரவுகளை வழங்கி வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.