Published : 28 Oct 2022 08:08 PM
Last Updated : 28 Oct 2022 08:08 PM

“துப்பாக்கி (அ) பேனாவால் தூண்டப்படும் நக்சல் தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டும்” - பிரதமர் மோடி

புதுடெல்லி: “துப்பாக்கி அல்லது பேனாவால் தூண்டிவிடப்படும் நக்சல் தீவிரவாதத்தின் ஒவ்வொரு வடிவமும் வேரோடு அழிக்கப்பட வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனை அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ஆற்றிய உரை: “கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டில் நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. துப்பாக்கி அல்லது பேனாவால் தூண்டிவிடப்படும் நக்சல் தீவிரவாதத்தின் ஒவ்வொரு வடிவமும் வேரோடு அழிக்கப்பட வேண்டும். அவை நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்தக்கூடியவை. வரும் தலைமுறையினரின் மனதை சிதைக்கும் வகையில் இதுபோன்ற சக்திகள் தங்களது அறிவுத் துறையை அதிகரித்து வருகின்றன. தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காகவும், நம் நாட்டில் இதுபோன்ற சக்திகள் வளர அனுமதிக்க முடியாது. அதேநேரத்தில், இத்தகைய சக்திகளுக்கு சர்வதேச அளவில் கணிசமான உதவிகள் கிடைக்கின்றன.

ஜம்மு - காஷ்மீர் அல்லது வடகிழக்கு மாநிலங்கள் என எதுவாக இருந்தாலும், இன்று நாம் நிரந்தர அமைதியை நோக்கி வேகமாக நகர்கிறோம். இப்போது நாம் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விரைவான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். இன்று, எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் மாற்றுக் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த பிராந்தியங்களில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை நிறுத்துவதற்கு இது உதவும். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு எல்லை மற்றும் கடலோர மாநிலங்கள் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்.

தீவிரவாதத்தின் அடிப்படை கட்டமைப்பை ஒழிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு மாநில அரசும் அதன் சொந்தத் திறனுடனும், புரிதலுடனும் தங்கள் பங்கைச் செய்ய முயற்சிக்கின்றன. எனினும், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து நிலைமையைக் கையாள்வது காலத்தின் தேவை. அரசியலமைப்பு சட்டத்தின் படி, சட்டம் ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பாக இருந்தாலும், அவை நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் சமமான அளவில் தொடர்புடையவை. ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலத்திடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், ஒவ்வொருவரிடமிருந்தும் உத்வேகத்தைப் பெற வேண்டும், நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும், இதுதான் அரசியலமைப்பின் உணர்வு என்பதுடன், நாட்டு மக்கள் மீது நமக்குள்ள பொறுப்பும் ஆகும்.

ஒட்டுமொத்த சட்டம் - ஒழுங்கு அமைப்பும் நம்பகமானதாக இருப்பது மிகவும் அவசியம். மக்களிடம் இதன் நம்பகத்தன்மையும், அணுகுமுறையும் மிகவும் முக்கியமாகும். குற்றம் நடந்த இடத்திற்கு காவல்துறையின் வருகை, அரசின் வருகையாக கருதப்படுகிறது. கொரோனா காலத்தில் காவல்துறைக்கு கிடைத்த நற்பெயர் ஊக்கம் அளிப்பதாக இருந்தது. எளிதில் அணுகக் கூடியதாகவும், அர்ப்பணிப்பு உள்ளதாகவும் காவல் துறை திகழ்கிறது என்ற கருத்து மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். இவ்விஷயத்தில் அவர்களை வழிநடத்துவது நமது தொடர்ச்சியான செயல்பாடாக இருக்க வேண்டும்.

குற்றங்கள் உள்ளூர் அளவில் நடப்பதாக இனி கருதப்பட மாட்டாது. மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச அளவிலான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, மாநில முகமைகளுக்கிடையேயும், மத்திய மற்றும் மாநில முகமைகளுக்கிடையிலும் பரஸ்பர ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். திறன்மிகு தொழில்நுட்பத்தின் உதவியுடன் சட்டம் ஒழுங்கு முறையை மேம்படுத்த முடியும்.

ஒரே நாடு... ஒரே காவல் சீருடை... - தொழில்நுட்பம் சாதாரண மக்கள் மத்தியில் பாதுகாப்பு மீது நம்பிக்கையை அதிகரிக்கும் என்பதால், பட்ஜெட்டின் கட்டுப்பாடுகளைத் தாண்டி, தொழில்நுட்பத்தின் தேவையை முதல்வர்கள் மற்றும் உள்துறை அமைச்சர்கள் தீவிரமாக மதிப்பிட வேண்டும். காவல் தொழில்நுட்பத் திட்டத்தைப் பொறுத்தவரை பல்வேறு மாநிலங்களின் பல்வேறு தொழில்நுட்பங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பதில்லை என்பதால், ஒரு பொதுவான தளம் அவசியமாகிறது. நாம் நாடு தழுவிய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும், நமது சிறந்த நடைமுறைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதாகவும், இயங்கக்கூடியதாகவும் உள்ள ஒரு பொதுவான இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

நாடு முழுவதும் காவல் துறையினருக்கு ஒரே சீருடை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இது சட்ட அமலாக்கப் பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை அளிக்கும். இதன் மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியும். அதே நேரம் மாநிலங்கள் தங்கள் எண் அல்லது சின்னங்களைக் கொண்டிருக்கலாம். "ஒரே நாடு, ஒரே காவல்துறை சீருடை" என்பதை உங்கள் கவனத்திற்கு ஒரு சிந்தனையாக முன்வைக்கிறேன். புதிய உலோக அழித்தல் கொள்கையின் அடிப்படையில் காவல்துறை வாகனங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். காவல்துறை வாகனங்கள் செயல்திறனுடன் தொடர்புடையவை என்பதால் அவை ஒருபோதும் பழையதாக இருக்கக்கூடாது. தேசியக் கண்ணோட்டத்துடன் நாம் முன்னோக்கிச் சென்றால், ஒவ்வொரு சவாலும் நம் முன்னால் வீழ்ச்சியடையும்” என்றார் பிரதமர் மோடி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x