

புதுடெல்லி: மத்திய பாதுகாப்பு துறை செயலர் அஜய் குமார் நேற்று கூறியதாவது:
ஏர்பஸ் நிறுவனத்தின் சி295 ரக விமானங்கள் முதன் முறையாக ஐரோப்பாவுக்கு வெளியே இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன. இந்த ஆலை, குஜராத் மாநிலம் வதோதராவில் அமைக்கப்படவுள்ளது.
ஏர்பஸ் சி295 போக்குவரத்து விமான தயாரிப்பு ஆலையை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்தியாவில் ராணுவ விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் பழைய அவ்ரோ-748 விமானங்களுக்குப் பதிலாக சி295 ரகத்தைச் சேர்ந்த 56 போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்கான ரூ.21,000கோடி ஒப்பந்தம் முதல் முறையாக ஏர்பஸ் பாதுகாப்பு மற்றும்விண்வெளி தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஏர்பஸ்நிறுவனம் சி295 ரக 40 விமானங்களை டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் உடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்க உள்ளது. எஞ்சிய 16 விமானங்கள் ஸ்பெயினின் செவிலி ஆலையில் 4 ஆண்டுகளில் தயாரித்து அளிக்கப்படவுள்ளது.