Last Updated : 27 Oct, 2022 06:52 AM

 

Published : 27 Oct 2022 06:52 AM
Last Updated : 27 Oct 2022 06:52 AM

ஷாருக், சல்மான், ரண்பீர், ஹிர்திக் பெயர்களில் கழுதை விற்பனை - ரூ.1,000 முதல் 5 லட்சம் விலையில் வாங்க குவிந்த வியாபாரிகள்

புதுடெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் 3 நாட்களுக்கான கழுதை சந்தை நடைபெற்றது. ஷாருக், சல்மான், ரண்பீர், ஹிர்திக் பெயரிலான கழுதைகள் ரூ.1,000 முதல் ஐந்து லட்சம் வரை விற்றன.

உத்தர பிரதேசத்தின் வறட்சிப் பகுதியாகக் கருதப்படுவது புந்தேல்கண்ட். இங்குள்ள சித்ரகுட் மாவட்டத்தில் மந்தாகினி நதி ஓடுகிறது. இதன் கரையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மறுநாளில் இருந்து 3 நாட்களுக்கு கழுதை சந்தை நடைபெறும். நேற்றுடன் முடிந்த இந்த சந்தையில் சுமார் 15,000 கழுதைகள் விற்பனை செய்யப்பட்டன. இவைகள் ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 5 லட்சம் வரை விற்கப்பட்டன.

இவற்றை வாங்கவும், விற்கவும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர். அண்டை நாடான நேபாளத்திலிருந்தும் வியாபாரிகள் தங்கள் கழுதைகளை கொண்டு வந்திருந்தனர்.

பல கழுதைகளுக்கு பாலிவுட் நட்சத்திரங்களின் பெயர்களை வியாபாரிகள் வைத்து இருந்தனர். பழம்பெரும் இந்தி நடிகரான ராஜ்குமார் பெயர் வைக்கப்பட்டிருந்த கழுதை ரூ.30,000-க்கு விற்கப்பட்டது. சல்மான்கான் எனப் பெயரிடப்பட்டிருந்து உயர் ரக கழுதை ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்பனையானது. ஷாருக் கான் என பெயரிடப்பட்ட மற்றொரு வகை கழுதை ரூ.90,000-க்கு விற்கப்பட்டது. அதிக பொதி சுமக்கும் கழுதைகளுக்கு ரண்பீர் கபூர் மற்றும் ஹிர்திக் ரோஷன் என பெயரிடப்பட்டிருந்தன. இவைகள் ரூ.40,000 முதல் 70,000 வரை விற்பனையாயின. மிக அதிகபட்சமாக நேபாளில் இருந்து கொண்டுவரப்பட்ட கழுதைகள் ரூ.5 லட்சத்திற்கு விற்பனையாகின. நேற்றுடன் முடிவடைந்த கழுதை சந்தையில் சுமார் ரூ. 2 கோடி வரை விற்பனையாகியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கழுதை சந்தை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முன்னாலால் திரிபாதி கூறுகையில், ‘‘ சந்தைக்கு விற்பனைக்கு வரும் ஒரு கழுதைக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கிறோம். இந்த சந்தை முகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் துவக்கப் பட்டு தொடர்கிறது. இங்கு படை எடுத்த அவுரங்கசீப்பின் பல குதிரைகள் நோய்வாய்பட்டு இறந்தன. எனவே, குதிரைகளுக்கு மாற்றாக அவர் கழுதை வியாபாரிகளை வரவழைத்து சந்தையை துவக்கினார்’’ என தெரிவித்தார்.

வட மாநிலங்களில் கட்டிடப் பணிகளில் செங்கல், மணல், கருங்கற்கள் போன்றவற்றை சுமந்து செல்லவும், சலவை தொழிலுக்கு துணி மூட்டைகளை சுமந்து செல்லவும் கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே குதிரைகளை விட கழுதை உரிமையாளர்களுக்கு லாபம் அதிகம். இதன் காரணமாக கழுதை சந்தையில் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x