Published : 23 Oct 2022 05:07 AM
Last Updated : 23 Oct 2022 05:07 AM

பிரம்மோஸ் ஏவுகணைகளை ரூ.41,500 கோடிக்கு விற்க இலக்கு - சவுதி அரேபியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் வாங்குவதற்கு ஆர்வம்

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதன்படி வரும் 2025-ம் ஆண்டுக்குள் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி மூலம் ரூ.41,500 கோடி வருவாய் இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க கடந்த 1998-ம் ஆண்டு ஒப்பந்தம்செய்தன. இந்தியாவின் பிரம்மபுத்திராநதி (Brahmaputra), ரஷ்யாவின் மாஸ்க்வா (Moskva) நதியின் பெயர்களில் இருந்து புதிய சூப்பர்சானிக் ஏவுகணைக்கு பிரம்மோஸ் (BrahMos) என்று பெயரிடப்பட்டது. படைப்பின் கடவுளான பிரம்மனின் வலிமைமிக்க ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை முன்னிறுத்தியும் இந்த பெயர் வைக்கப்பட்டது.

கடந்த 2001-ம் ஆண்டில் ஒடிசாவில் பிரம்மோஸ் ஏவுகணை முதல்முறையாக வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதன்பிறகு நீர், நிலம், வான்பரப்பில் இருந்து ஏவும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. பின்னர் முப்படைகளிலும் பிரம்மோஸ் சேர்க்கப்பட்டது.

தற்போது பிரம்மோஸ் ஏவுகணை களை நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், நிலத்தில் இருந்து ஏவ முடியும். இது உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையாகும். 28 அடிநீளம், 2 அடி விட்டம், 3,000 கிலோ எடைகொண்ட பிரம்மோஸ் ஏவுகணை ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் சீறிப்பாயக்கூடியது. இந்த ஏவுகணையின் வேகம், பாயும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச்சில் நடத்தப்பட்ட சோதனையின்போது பிரம்மோஸ் ஏவுகணை 450 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து இலக்கை தாக்கி அழித்தது.

புதிய உற்பத்தி ஆலை: இந்தியா, ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமையகம் டெல்லி யில் செயல்படுகிறது. இதன் உற்பத்தி ஆலை ஹைதராபாத்தில் உள்ளது. உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலை திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது.

புதிதாக உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் ரூ.300 கோடி செலவில் 80 ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மோஸ்உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகிறது. வரும் 2024-ம் ஆண்டில் புதிய ஆலையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுதோறும் 100 பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க முடியும்.

எடை குறைப்பு: பிரம்மோஸின் அடுத்த தலைமுறை ஏவுகணையான பிரம்மோஸ் என்.ஜி.தயாரிப்பில் தற்போது தீவிர ஆராய்ச்சி நடக்கிறது. இதில் குறிப்பாக ஏவுகணையின் எடை பாதியாக குறைக்கப்படுகிறது. தற்போது நிலம், போர்க்கப்பலில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸின் எடை 3,000 கிலோவாகவும் போர் விமானத்தில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸின் எடை 2,500 கிலோவாகவும் உள்ளது.

புதிதாக தயாரிக்கப்படும் பிரம்மோஸ் என்.ஜி. ஏவுகணையின் எடை 1,330 கிலோவாக இருக்கும். இதன்மூலம் போர் விமானங்களில் இருந்து மிக எளிதாக ஏவ முடியும். அடுத்த ஆண்டு இறுதி அல்லது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் பிரம்மோஸ் என்.ஜி. ஏவுகணையின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. புதிய ஹைப்பர்சானிக் ஏவுகணைக்கு பிரம்மோஸ் 2 (K) என்று பெயரிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நினைவுகூரும் வகையில் ஏவுகணையுடன் "K" என்ற வார்த்தை சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த ஏவுகணை மணிக்கு 9,000 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். 1,000 கி.மீ. முதல் 1,500 கி.மீ. வரையிலான இலக்கை தாக்கி அழிக்கும். 500 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்லும். வரும் 2024-ம் ஆண்டில் முதல் சோதனைநடத்தப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் பிரம்மோஸ் ஹைப்பர்சானிக் ஏவுகணை உற்பத்திதொடங்கப்பட உள்ளது. பிரம்மோஸ்ஏவுகணைகளை செயற்கைக்கோள்கள் மூலம் ஏவும் ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளை வாங்கபிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் ஏற்கெனவே ரூ.3,103 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்தநாட்டுக்கு அடுத்த ஆண்டு ஏவுகணைகள் அனுப்பப்படும் என்று பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தெரிவித்துள்ளது.

வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுடனும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, வரும் 2025-ம் ஆண்டுக்குள் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி மூலம் ரூ.41,500 கோடி வருவாய் இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணையை வாங்கவும் பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்புக்காகவே ஆயுதங்களை இந்தியா வழங்குகிறது

இந்தியா ஒருபுறம் பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகள், ஆயுதங்களை தயாரிப்பது மட்டுமின்றி விற்பனையிலும் இறங்கியிருப்பதால், போருக்கு வழிவகுக்குகிறது என்று மற்ற நாடுகள் நினைக்க முடியாது. ஏனெனில், ஆயுதங்களை வாங்கும் வெளிநாடுகள், அந்தந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ளவே இந்தியா வழங்குகிறது என்று சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதற்கு உதாரணமாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ், இந்திய பயணத்தின் போது பேசுகையில், ‘‘ஐ.நா. சார்பில் சர்வதேச அளவில் அமைதியை ஏற்படுத்தும் ராணுவப் படைக்கு (பல நாடுகள் சேர்ந்த அமைதிப் படை) ஆயிரக்கணக்கான வீரர்களை இந்தியா அனுப்பி வருகிறது. அவர்களில் ஏராளமானோர் பல நாடுகளில் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். உலக அமைதிக்கு இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கை அளப்பரியது’’ என்று மனம் திறந்து பாராட்டியிருப்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு பரவாயில்லை; இந்தியா போன்ற வளரும் நாடுகள் ராணுவத்துக்கு ஏராளமாக நிதி ஒதுக்குவது வளர்ச்சியை பாதிக்கும் என்று விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், ராணுவத்துக்கு நிதி ஒதுக்கி அதிநவீன ஆயுதங்கள் தயாரிப்பது மட்டுமன்றி, மற்ற சிறிய நாடுகளின் பாதுகாப்புக்கும் அவற்றை வழங்குவதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும் என்பதை இந்தியா நிரூபித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பொதுச்செயலாளர் புகழாரம்: மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசியதாவது: இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய கொள்கைகளை பின்பற்றி ஐ.நா. சபை செயல்படுகிறது. ஐ.நா. அமைதிப் படைக்கு இந்தியாவில் இருந்தே அதிக அளவில் வீரர்கள் அனுப்பப்படுகின்றனர். கடந்த 1948-ம் ஆண்டு முதல் 49-க்கும் மேற்பட்ட அமைதி திட்டங்களில் இந்திய வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றி உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா திறம்பட செயல்பட்டு வருகிறது. அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள், நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். கரோனா பெருந்தொற்று காலம், தற்போதைய உக்ரைன் போரால் சர்வதேச அளவில் உணவு, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஏராளமான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டு உள்ளனர்.

சோதனைகளை, சாதனைகளாக மாற்றுவதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக விளங்குகிறது. வறுமை ஒழிப்பு, வளர்ச்சியில் மற்ற நாடுகளைவிட இந்தியா மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை திட்டம் என இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

இந்தியாவில் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்டோர் செல்போன் இணைய வசதியை பயன்படுத்துகின்றனர். ஆன்லைன் சுகாதார சேவைகள், நிதித் துறை சார்ந்த சேவைகளில் இந்தியா முன்னோடியாக விளங்குகிறது. அனைத்து துறைகளிலும் இந்திய பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். டிஜிட்டல் சுகாதார தளம், கோவின் திட்டங்களால் கரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் இலங்கை, ஆப்கானிஸ்தானுக்கு தடுப்பூசிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்களை இந்தியா தாராளமாக வழங்கியது.

இன்றைய கால கட்டத்தில் பல்வேறு நாடுகள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றன. அந்த நாடுகளை மீட்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதை வரவேற்கிறோம். ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. இதன்மூலம் சர்வதேச நிதி கட்டமைப்பில் இந்தியாவால் சீர்திருத்தத்தை ஏற்படுத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். பல்வேறு பிரச்சினைகளை உலகம் சந்தித்து வரும் வேளையில் சர்வதேச அரங்கில் இந்தியா முன்வரிசையில் நின்று பணியாற்ற அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x