Published : 20 Oct 2022 07:30 AM
Last Updated : 20 Oct 2022 07:30 AM

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து - பாத யாத்திரையில் ராகுல் காந்தி வாக்குறுதி

கர்னூல் மாவட்டம், ஆதோனியில் உள்ள மகாலட்சுமி கோயிலில் வழிபட்ட ராகுல்.

கர்னூல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என கர்னூல் மாவட்டத்தில் நேற்று பாத யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போது ஆந்திராவில் தேசிய ஒற்றுமை பாத யாத்திரையை மேற்கொண்டு வரு கிறார். இந்த யாத்திரை கர்னூல் மாவட்டம் ஆதோனியை நேற்று வந்தடைந்தது. வழி நெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் அங்குள்ள மகாலட்சுமி கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். பின்னர் பல கிராமங்கள் வழியாக எமிங்கனூர் வரை பாத யாத்திரை தொடர்ந்தது. வழியில், ஆதோனியில் செய்தி யாளர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டியே இந்த பாத யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. ஆந்திர மாநில பிரிவினையின் போது காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். போலவரம் அணைப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.

ஆந்திராவில் 3 தலைநகர்கள் திட்டத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது. அமராவதி ஒன்றே ஆந்திராவின் தலைநகராகும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
இந்த பாத யாத்திரையில், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சைலஜா நாத், மூத்த காங்கிரஸார் திக்விஜய் சிங், ஜேடி. சீலம், எல்லம் ராஜு, கனுமூரி பாபிராஜு, எம்எல்ஏ சீதக்கா உட்பட தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x