Published : 20 Oct 2022 07:22 AM
Last Updated : 20 Oct 2022 07:22 AM

இந்தியாவில் ‘ஏகே 203’ துப்பாக்கிகள் தயாரிப்பை விரைவில் தொடங்க ரஷ்யா திட்டம்

புதுடெல்லி: ரஷ்ய ரக கலாஷ்னிகோவ் ஏகே -203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்க ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கென்று இந்தோ–ரஷ்யா ரைபிள்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற பெயரில் உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்யாவின் ராணுவத் தளவாட அமைப்பான ரோஸோபோரோனெக்ஸ்போர்ட்டின் டைரக்டர் ஜெனரல் அலெக்சாண்டர் மிகீவ் கூறுகையில், “இவ்வாண்டு இறுதியில் ஏகே 203 தயாரிப்பு இந்தியாவில் தொடங்கும். தயாரிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர்மயமாக்கலின் கீழ் ரஷ்யாவின் துப்பாக்கிகளை 100 சதவீதம் இந்தியாவில் தயாரிக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 22-ம் தேதி வரை நடைபெறும் ராணுவத் தளவாட கண்காட்சியில் பங்கேற்றுள்ள, ரோஸோபோரோனெக்ஸ்போர்ட் நிறுவனம், இந்திய தரப்புடன் ஏகே 203 தயாரிப்பு மற்றும் விநியோகம் குறித்து கலந்தாலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏகே 203 துப்பாக்கி 3.8 கிலோ எடையுள்ளதாக இருக்கும் என்றும் இந்தத் துப்பாக்கி மூலம் 800 மீட்டர் வரை குறிவைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்தியா–ரஷ்யா இடையிலான ஒப்பந்தத்தின்படி, ரூ.5 ஆயிரம் கோடி செலவில் 6 லட்சம் ஏகே 203 துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x