சீன எல்லை அருகே அருணாச்சலை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் மாயம் - தேடுதல் பணி தீவிரம்

சீன எல்லை அருகே அருணாச்சலை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் மாயம் - தேடுதல் பணி தீவிரம்

Published on

இடாநகர்: சீன எல்லை அருகே அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மாயமாயினர். அவர்களைத் தேடும் பணியை பாதுகாப்புப் படை வீரர்கள் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து அருணாச்சல் பிரதேச மாநிலம் அஞ்சாவ் மாவட்டபோலீஸ் எஸ்.பி. ரிகே கம்சி கூறியதாவது:

இங்குள்ள அஞ்சாவ் மாவட்டத்தில் அமைந்துள்ளது கொலியான் பகுதி. இந்த ஊரை சேர்ந்த படெய்லம் டிக்ரோ, பயிங்சோ மன்யூ ஆகிய 2 இளைஞர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். சீன எல்லையோர பகுதியான சக்லகாமில் வளர்ந்திருக்கும் மருத்துவ குணம் கொண்ட செடிகளை கண்டறிவதற்காக இருவரும் சென்றதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் இதுவரைவீடு திரும்பவில்லை. காணாமல் போன இருவரையும் மாதக் கணக் கில் தேடி வந்த உறவினர்களும் நண்பர்களும் கடந்த அக்டோபர் 9 -ம் தேதி அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். கடந்த ஆகஸ்ட் 24-ம்தேதி இருவரையும் சீன எல்லையில் பார்த்ததாக போலீஸாரிடம் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் உதவியுடன் நாங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

அவர்கள் தவறுதலாக சீன பகுதிக்குச் சென்றிருக்கலாம் என கருதுகிறோம். இதுவரை நடந்த தேடுதல் பணி தொடர்பான விவரங்களை மாநில அரசிடம் அறிக்கையாக தரவுள்ளோம்.

இப்பகுதியைச் சேர்ந்த இளை ஞர்கள் மருத்துவக் குணம் கொண்ட மூலிகைகளைத் தேடி சீனஎல்லையில் உள்ள வனப்பகுதிக்குள் செல்வது வழக்கமான ஒன்றுதான். அவர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in