Last Updated : 15 Oct, 2022 09:24 AM

 

Published : 15 Oct 2022 09:24 AM
Last Updated : 15 Oct 2022 09:24 AM

காஷ்மீரில் ராணுவ வீரர்களை காக்கும் மோப்ப நாய்கள் - தனிப்படைகள் உதவியால் சிக்கும் தீவிரவாதிகள், ஆயுதங்கள்

புதுடெல்லி: கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பது, மறைந்திருக்கும் தீவிரவாதிகளை வெளியே கொண்டு வருவது, தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல்களை எதிர்கொள்வது போன்ற பல நடவடிக்கைகளில் ராணுவத்தின் மோப்ப நாய்கள் நம்ப முடியாத வகையில் செயல்படுகின்றன. அதற்காகவே மோப்ப நாய்கள் கொண்ட தனிப்படைகள் பல உள்ளன.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் மோப்ப நாய்கள் தான் முதலில் நிற்கின்றன. எனவே இந்த வீரவிலங்குகள் படை இந்திய ராணுவத்தின் நம்பிக்கைக்கு உரியதாகிவிட்டது. இவற்றில் ஒன்றாகத்தான் 2 வயது மோப்பநாய் ஜூம் இடம் பெற்றிருந்தது.

கடந்த அக்டோபர் 10-ம் தேதி அனந்தநாக் மாவட்டத்தின் ஒரு பகுதியில் ‘சினார் வாரியர்ஸ்’ படையினர் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அங்குள்ள ஒரு வீட்டில் ஒளிந்திருக்கும் தீவிரவாதிகள் எண்ணிக்கை பற்றியோ, அவர்கள் வசமுள்ள ஆயுதங்கள் பற்றியோ ராணுவத்திடம் தகவல் கிடையாது. இதனால் முதல் நடவடிக்கையாக மோப்ப நாயான ஜூம் முன்னே சென்றது. தமது பயிற்சியாளர் உத்தரவு கிடைத்ததும் அந்த வீட்டை நோக்கி சிட்டாகப் பறந்து ஓடியது ஜூம். இது வரும் ஓசை கேட்ட தீவிரவாதி அந்த வீட்டை விட்டு வெளியே வர, அவனை கடித்துக் குதறத் தொடங்கியது ஜூம். இதைக்கண்டு மற்றொரு தீவிரவாதி வெளியில் ஓடிவந்து துப்பாக்கியால் சுட்டதில் ஜூம் மீது 2 குண்டுகள் பாய்ந்தன. எனினும் தான் கவ்விப் பிடித்த தீவிரவாதியின் கையை விடாமல் அவனை கீழே தள்ளியது ஜூம்.

ஜூமின் முதுகில் சக்திவாய்ந்த கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் கண்காணித்துக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள் விரைந்து சென்று, அங்கிருந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இருவரையும் சுட்டு வீழ்த்தினர். படுகாயம் அடைந்த ஜூம், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது. தீவிரவாதிகளுடன் நேரடியாக மோதி வெல்லவும் ஜூம் பயிற்சி பெற்றுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை பலவற்றில் ஜூம் பங்கேற்றுள்ளது.

ஜூமை போல் மோப்ப நாய்கள் வீரத்தியாகம் புரிவது இது முதன்முறையல்ல. இதற்கு முன் ஜுலை 30-ல் பாராமுல்லாவில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற ஒரு மோதலில் அக்ஸல் என்ற மோப்ப நாய் உயிரிழந்தது. தீவிரவாதிகள் ஒளிந்திருந்த வீட்டில் அச்சமின்றி முதலில் புகுந்த அக்ஸல் அவர்களால் சுடப்பட்டது. இதில் அக்ஸல் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தாலும் அதன் முதுகிலிருந்து கேமரா உதவியால் அங்கிருந்த தீவிரவாதிகள், இந்திய வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதற்காக அக்ஸலுக்கு கடந்த ஆகஸ்ட் 15-ல் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவால் சிறப்பு விருது அளிக்கப்பட்டு அதன் தியாகம் நினைவுகூரப்பட்டது.

இந்தப் படையிலுள்ள விலங்குகளுக்கு 9 முதல் 12 மாதங்கள் வரை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளரின் லேசான சமிக்ஞைகளை கூட மிகத்தெளிவாக புரிந்து கொள்ளும் திறனை அவை பெறுகின்றன. இதுகுறித்து காஷ்மீரிலுள்ள லெப்டினன்ட் கர்னல் அபய் கோக்கர் கூறும்போது, “இந்த விலங்குகளின் படையில் தாக்கும் நாய்கள் (அசால்ட் டாக்ஸ்), பாதுகாக்கும் நாய்கள் (கார்ட் டாக்ஸ்), மோப்ப நாய்கள் (ஸ்னிப்பர் டாக்ஸ்) என பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் அனைத்து வகை பயிற்சிகளையும் பெற்றுள்ளன. ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் போதைப் பொருட்களையும் இவை அடையாளம் காணும்” என்றார்.

தேடுதல் வேட்டையின் போது இவை தேவையின்றி குலைப் பதில்லை. தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கை முடிந்த பின்பும் சில நேரங்களில் அவர்களில் சிலர் உயிருடன் இருப்பதுண்டு. இவர்கள் முன்கூட்டியே வைத்த குண்டுகளை வெடிக்கச் செய்து விடுவதும் உண்டு. இவற்றை தடுக்க ராணுவ வீரர்கள் தமது மோப்ப நாய்களை அனுப்பி இறுதியாக சோதிக்கின்றனர்.

இந்திய ராணுவ வீரர்களின் வீரம், இந்த உலகம் அறிந்த ஒன்று. ஆனால் அவர்களின் வீரத்தையும் மிஞ்சும் வகையில் இங்குவிலங்குகளின் பங்களிப்பு உள்ளது.வீரத் தியாகம் புரிந்த ஜூம் மூலமாக, இந்திய ராணுவத்தில் மோப்பநாய்கள் படையின் தீரமும் முதன்முறையாக வெளியாகியுள்ளது. இந்தப் படையிலுள்ள விலங்குகளுக்கு9 முதல் 12 மாதம் வரை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளரின் லேசான சமிக்ஞைகளை கூட மிகத்தெளிவாக புரிந்துகொள்ளும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x