Published : 24 Nov 2016 10:23 AM
Last Updated : 24 Nov 2016 10:23 AM
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சர்ச்சைக்குரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகர் மீது ஷூ வீசியும், மைக்கை உடைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சர்ச்சைக்குரிய 2 நில சட்டத் திருத்த மசோதா தொடர்பாக ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று சட்டப்பேரவை தொடங்கியதும் இச்சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டன.
கடும் அமளியால் முதல் பகுதியில் ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவை, பிற்பகல் 2 மணிக்கு கூடிய போது, நிலம் மற்றும் வருவாய் துறை அமைச்சர் அமல் பிவாரி சர்ச்சைக்குரிய சட்டத்திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கும், அமளிக்கும் இடையே, எவ்வித விவாதமும் இன்றி ஒரு சில நிமிடங்களில் சட்டத்திருத்த மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டு குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் தினேஷ் ஓரானின் இருக்கையை நோக்கிச் சென்று அவரின் மைக் உள்ளிட்ட பொருட்களைச் சேதப்படுத்தினர். இருக்கைகளை உடைத்து ஆங்காங்கே வீசியெறிந்தனர்.
சபாநாயகரை நோக்கி உறுப்பினர் ஒருவர் ஷூவை வீசினார். இச்சம்பவங்களுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT