Published : 12 Oct 2022 02:27 PM
Last Updated : 12 Oct 2022 02:27 PM

கேரள நரபலி சம்பவ வழக்கு | நரமாமிசம் சாப்பிட்டார்களா? - போலீஸ் சந்தேகம்

இரு பெண்கள் கொல்லப்பட்ட வீட்டின் அருகே கொச்சி துணை போலீஸ் கமிஷனர் எஸ்.ஸ்ரீதரனுடன் விவாதிக்கும் கேரள பெண்கள் ஆணைய தலைவர் பி.சீதாதேவி | படம்: லெஜு கமல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவ வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அம்மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தம்பதியால் நடத்தப்பட்ட நரபலி சம்பவம், அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் எலந்தூரை சேர்ந்தவர்கள் பகவல் சிங், லைலா. மாந்திரகத்தில் நம்பிக்கை கொண்ட இவர்கள் விரைவில் பணக்காரர்களாக வேண்டி இரு பெண்களை நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு தரகர் முகமது ஷபி என்பவர் உதவியுள்ளார். நரபலிக்காக கேரளாவைச் சேர்ந்த ரோஸ்லின், தமிழகத்தை சேர்ந்த பத்மா ஆகிய இரு பெண்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இரு பெண்களின் உடல்களும் வெட்டப்பட்டு தம்பதியின் வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டதை போலீஸார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

இந்த நிலையில், ரோஸ்லின் மகள் மற்றும் பத்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரில் அடிப்படையில் மாயமான இரு பெண்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில்தான் இந்த அதிர்ச்சியான சம்பவம் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கொச்சி போலீஸார் தரப்பில் கூறும்போது, “பெண்கள் இருவரும் பணத்திற்காக நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ரோஸ்லின் ஜூன் மாதம் கொல்லப்பட்டுள்ளார். பத்மா செப்டம்பர் மாதம் கொல்லப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். எங்களிடம் தற்போது இவ்வளவு தடயங்கள்தான் கிடைத்துள்ளன. தரகர் முகமது ஷபி மற்றும் தம்பதிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

இதனிடையே, இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிப்பது குறித்து அம்மாநில உயர் நீதிமன்றம் அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறது. கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை வேறு ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போது நரபலி குறித்த தனது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். இதுகுறித்து நீதிபதி ராமசந்திரன் கூறுகையில், "அரசின் கவனக்குறைவையும், மக்களின் விசித்திரமான நடவடிக்கைகளையும் நீதிமன்றம் கவனித்து வருகிறது. கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்படும் செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது என்பது மனித பகுத்தறிவை மீறிய செயல். இந்தச் செயல்களால் கேரளா எதை நோக்கிச் செல்கிறது என்ற ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது" என்று தெரிவித்தார்.


 

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x