Published : 12 Oct 2022 01:42 PM
Last Updated : 12 Oct 2022 01:42 PM

“கேரளா எதை நோக்கி செல்கிறது?” - 2 பெண்கள் நரபலி சம்பவத்தில் உயர் நீதிமன்றம் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிப்பது குறித்து அம்மாநில உயர் நீதிமன்றம் அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை வேறு ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போது நரபலி குறித்த தனது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். இதுகுறித்து நீதிபதி ராமசந்திரன் கூறுகையில், "அரசின் கவனக்குறைவையும், மக்களின் விசித்திரமான நடவடிக்கைகளையும் நீதிமன்றம் கவனித்து வருகிறது. கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்படும் செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது என்பது மனித பகுத்தறிவை மீறிய செயல். இந்தச் செயல்களால் கேரளா எதை நோக்கிச் செல்கிறது என்ற ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது" என்று தெரிவித்தார்.

முன்னதாக பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டது குறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜு கூறியது: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பகவால் சிங். இவரிடம் வரும் நோயாளிகளின் நோய்களை குணமாக்கி வந்தார். இவரது மனைவி லைலா. ஹீலிங் எனப்படும் இந்தத் தொழிலை இவர்கள் பரம்பரை, பரம்பரையாக செய்து வருகின்றனர். இந்நிலையில், பகவால் சிங்குக்கு பணம் செழிப்பதற்காகவும், வளத்தைப் பெருக்குவதற்காகவும் 2 பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுத்த விவரம் எங்களுக்குத் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த பெரும்பாவூர் ஷபி (எ) ரஷீத் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகவால் சிங், லைலா இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளோம். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். எர்ணாகுளத்திலிருந்து அந்த 2 பெண்களையும் பணம் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றி அழைத்து வந்து கொலை செய்துள்ளனர். 2 பெண்களையும் மிகவும் கொடூரமான முறையில் கொன்றுள்ளனர். இது நரபலியாக இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். 2 பெண்களின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு சென்றுள்ளோம். உயிரிழந்த 2 பெண்களும் லாட்டரி வியாபாரிகள். எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஸ்லின், பத்மா அவர்களது பெயர் எனத் தெரியவந்துள்ளது. இதில் பத்மா தமிழகத்தைச் சேர்ந்தவர்.

கொலையுண்ட இரு பெண்கள் மற்றும் பகவால் சிங்

கைது செய்யப்பட்ட ஷபியிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளோம். அதைப் போலவே பகவால் சிங், லைலா ஆகியோரிடமும் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளோம். பகவால் சிங்குக்கு அதிக பணத்தேவை இருந்ததால் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது” என்று அவர் கூறினார்.

இந்தநிலையில், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை இரண்டு வாரங்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கொச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x