Published : 11 Oct 2022 06:18 PM
Last Updated : 11 Oct 2022 06:18 PM

அரசு மரியாதையுடன் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் | இறுதிச் சடங்கில் தலைவர்கள் பங்கேற்பு

இறுதி ஊர்வலம்

லக்னோ: மறைந்த சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவரும், உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்தவரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான முலாயம் சிங் யாதவ், உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுடெல்லி அருகே குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

சொந்த ஊரில் இறுதிச் சடங்கு: உயிரிழந்த முலாயம் சிங் யாதவின் உடல், அவரது சொந்த ஊரான சைஃபை-க்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், சமாஜ்வாதி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, இறுதிச் சடங்குகள் செய்வதற்காக மக்கள் வெள்ளத்தில் முலாயம் சிங் யாதவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்துக்கு உடல் சென்ற பிறகு, துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, முலாயம் சிங் யாதவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தலைவர்கள் பங்கேற்பு: இந்நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், முலாயம் சிங் யாதவின் சகோதரரும் பி.எஸ்.பி கட்சியின் தலைவருமான சிவ்பால் யாதவ், திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக இளைஞரணிதலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைவர்கள் புகழாரம்: இந்திய அரசியலில் மிகப் பெரிய தலைவராக விளங்கிய முலாயம் சிங் யாதவுடன் தங்களுக்கு மிக ஆழமான உறவு இருந்ததாகவும், அவரது மறைவு நாட்டிற்கு மிகப் பெரிய இழப்பு என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இறுதிச் சடங்கு நிழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியால் கலந்து கொள்ள இயலாததால், அவரது சார்பில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த தன்னை அனுப்பிவைத்ததாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

முலாயம் சிங் யாதவின் மறைவை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "மிகப் பெரிய ஆளுமையாக விளங்கியவர் முலாயம் சிங் யாதவ். அடிமட்டத்தில் இருந்து வந்த தலைவர் அவர். எனவே, மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உணர்ச்சிப்பூர்வமாக செயல்பட்டவர். மக்கள் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியாவின் வழித்தடத்தில் பயணிப்பதற்காக வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்" என குறிப்பிட்டிருந்தார்.

கடந்து வந்த பாதை: உத்தரப்பிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள சைஃபை கிராமத்தில் 1939ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி பிறந்தவர் முலாயம் சிங் யாதவ். இவர் 1967ம் ஆண்டு தனது 28வது வயதில் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார்.

  • 1992ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி சமாஜ்வாதி கட்சியை நிறுவினார்.
  • 10 முறை உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட முலாயம் சிங் யாதவ் 3 முறை அம்மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார்.
  • மக்களவை உறுப்பினராக 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முலாயம் சிங் யாதவ், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
  • முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், தற்போது சமாஜ்வாதி கட்சியின் தலைவராக உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x