சொத்துக் குவிப்பு வழக்கு | ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆ.ராசா | கோப்புப் படம்
ஆ.ராசா | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் ஆ.ராசா. அப்போது, புதுடெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றுக்கு ஆ.ராசா சாதகமாக நடந்து கொண்டதாகவும், இதனால் பலன் அடைந்த அந்த நிறுவனமானது ராசாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நடத்திய நிறுவனத்தின் மூலம் அவருக்கு ஆதாயத்தை அளித்ததாகவும் சிபிஐ புகார் தெரிவித்திருந்தது.

இது குறித்து தொடர் விசாரணை நடத்திய சிபிஐ, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆ.ராசாவுக்கு எதிராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.53 கோடி சொத்து சேர்த்துள்ளதாகவும், இது அவரது வருமானத்தைவிட 579 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது சிபிஐ வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் இருந்து ஆ.ராசா கடந்த 2017-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in