Published : 08 Oct 2022 05:26 AM
Last Updated : 08 Oct 2022 05:26 AM

டெல்லி மதுக்கடை உரிமம் ஊழல் வழக்கு தொடர்பாக 35 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

புதுடெல்லி: டெல்லி மதுக்கடை உரிமம் ஊழல் வழக்கு தொடர்பாக 35 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன.

இதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமைச் செயலர் நரேஷ் குமார், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் கடந்த ஜூலை மாதம் அறிக்கை அளித்தார். அதன்பேரில், மதுக்கடை உரிமம் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.

இதன்பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் 3 அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஊழல் விவகாரத்தில் பணம் பரிமாற்ற மோசடி நடைபெற்றிருப்பதால் அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, கடந்த செப்டம்பர் 6, 16 ஆகிய தேதிகளில் சிபிஐ, அமலாக்கத் துறை சார்பில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில் டெல்லி மதுக்கடை உரிமம் ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் டெல்லி, சண்டிகர், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் 35 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. பஞ்சாபில் சண்டிகர் உள்ளிட்ட 4 இடங்களில் சோதனை நடைபெற்றது.

சிரோமணி அகாலிதளத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தீப் மல்ஹோத்ராவின் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சோதனை குறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

மதுபான உரிமம் ஊழல் வழக்கில் கடந்த 28-ம் தேதி தொழிலதிபர் சமீர் மகேந்திருவை கைது செய்தோம். மதுக்கடை உரிமம் பெறுவதற்காக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் நெருங்கிய நண்பர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் அளித்த தகவலின்பேரில் 35 இடங்களில் சோதனை நடத்தி உள்ளோம். இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. 2 பேரை கைது செய்துள்ளோம்.

பஞ்சாபில் சண்டிகர், லூதியானா, பாரித்கோட் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ தீப் மல்ஹோத்ரா, 2 மதுபான நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளார். அந்த நிறுவனங்கள் டெல்லியில் பல்வேறு மதுக்கடை உரிமங்களைப் பெற்றுள்ளன. இதுதொடர்பாக பாரித்கோட் நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவரது வங்கிக் கணக்கு பணப் பரிமாற்றங்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. இதில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “கடந்த 3 மாதங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. சிபிஐ, அமலாக்கத் துறையை சேர்ந்த 300 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களால் இதுவரை எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்தத்தில் சோதனை நடத்தப்படுகிறது. இப்படியிருக்கும்போது நாடு எவ்வாறு முன்னேறும்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x