

மக்களின் சில்லறை பிரச்சினை தீர, கோயில் உண்டியல் காணிக்கை பணத்தை அன்றாடம் வங்கியில் செலுத்த ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாணிக்கியால ராவ் நேற்று விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி, அதற்கு மாற்றாக புதிய நோட்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். கறுப்புப் பணத்துக்கு எதிராக அவர் எடுத்த இந்த நடவடிக்கையை மக்கள் ஆதரிக்கின்றனர். ஆனால் சில்லறை தட்டுப்பாட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஆங்காங்கே சிரமப்படுகின்றனர். எனவே ஆந்திர மாநிலத்தில் உள்ள 24 ஆயிரம் பெரிய மற்றும் சிறிய கோயில்களில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணத்தை அன்றாடம் வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டுள்ளேன். இதன்மூலம் சில்லறை பிரச்சினையை ஓரளவு சமாளிக்க முடியும். திருப்பதி தேவஸ்தானத்திற்கும் இதுகுறித்த உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.