காஷ்மீரில் பிரதமர் மோடி அரசின் நடவடிக்கையால் தீவிரவாத தாக்குதல் 56 சதவீதம் குறைந்தது - மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்

ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, தீவிரவாதிகளுடனான என்கவுன்ட்டரில் உயிரிழந்த காவல் துறை சிறப்பு அதிகாரி (எஸ்பிஓ) முடாசிர் ஷேக்  குடும்பத்தினரை, பாரமுல்லா நகரில் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். படம்: பிடிஐ
ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, தீவிரவாதிகளுடனான என்கவுன்ட்டரில் உயிரிழந்த காவல் துறை சிறப்பு அதிகாரி (எஸ்பிஓ) முடாசிர் ஷேக் குடும்பத்தினரை, பாரமுல்லா நகரில் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். படம்: பிடிஐ
Updated on
1 min read

ஜம்மு: மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா 3 நாள் பயணமாக கடந்த 3-ம் தேதி ஜம்மு காஷ்மீர் சென்றார். 3-ம் நாளான நேற்று ஜம்மு நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த சில திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் முந்தைய ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகம் காரணமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்களும் ஊழலும் தலைவிரித்தாடின. 3 அரசியல் குடும்பங்கள்தான் இதற்கு முக்கிய காரணம். குறிப் பாக காஷ்மீரில் தீவிரவாத தாக்கு தலுக்கு இதுவரை 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்ததும் காஷ்மீர் வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. தீவிரவாத செயல்களை ஒடுக்கவும் ஊழலை ஒழிக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் இப்போது காஷ்மீர் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாத சம்பவங்கள் 56% குறைந்துள்ளது. தீவிரவாதத்தால் உயிரிழக்கும் பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை 84 சதவீதம் குறைந்துள்ளது.

மேலும் தீவிரவாதத்துக்கு ஆள்சேர்ப்பது, கடையடைப்பு, பாதுகாப்புப் படையினர் மீதான கல்வீச்சு சம்பவங்கள் குறைந்துள்ளன. இதற்குக் காரணம் என்னவென்றால், ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களே இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவித்தனர். அவர்கள் அதிகாரத்தை இழந்த பிறகு என்கவுன்ட்டர் சம்பவங்கள் குறைந்துள்ளன. தீவிரவாதிகள் சரணடைய இப்போது வாய்ப்பு வழங்கப்படுகிறது.

நாடு சுதந்திரம் பெற்றது முதல் 2019 வரையில் காஷ்மீரில் வெறும் ரூ.19 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.56 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் 27 லட்சம் மக்கள் மத்திய அரசின் சுகாதார காப்பீடு திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். ரூ.5 லட்சம் வரை பணமின்றி சிகிச்சை பெற இத்திட்டம் வகை செய்கிறது. மேலும் 58 சதவீத மக்களின் வீடுகளுக்கு குழாய் மூலம் நேரடியாக தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழல் புரிந்து வந்தவர்கள், தொடர்ந்து ஊழலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ரூ.80 ஆயிரத்து 68 கோடி மதிப்பிலான 63 வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். அந்த திட்டங்களில் சில அமலுக்கு வந்துள்ளன. மேலும் பல திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in