Published : 01 Oct 2022 06:07 AM
Last Updated : 01 Oct 2022 06:07 AM

யூதர்கள், முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த பிஎஃப்ஐ சதி - தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் அம்பலம்

புதுடெல்லி: தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ கடந்த மாத இறுதியில் 2 முறை சோதனை நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்தது. இவர்களிடம் தீவிரவாத சதி தொடர்பாக ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் பணம் பெறப்பட்டு, வங்கிகளில் ரூ.120 கோடி டெபாசிட் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. என்ஐஏ விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பிஎஃப்ஐ தொண்டர்கள் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் வரை அபாய பயணம் மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாத நடைமுறைகளை இந்தியாவுக்குள் செயல்படுத்தவும் அவர்கள் முயன்றுள்ளனர். இதற்காக இந்தியாவுக்குள் குழு ஒன்றையும் அவர்கள் உருவாக்கி, கொடைக்கானல் வரும் யூதர்கள், கோழிக்கோடில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு ஐஎஸ் உமர்-அல்-ஹிந்தி வழக்கை விசாரித்த என்ஐஏ குழுவினர் கூறுகையில், ‘‘தென்மாநிலங்களில் இருந்து 15 இளைஞர்கள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு வெடிபொருட் களை திரட்டவும், முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் கடந்த 2016-ம் ஆண்டு தீவிரவாதிகள் சிலர் லாரியை பொதுமக்கள் மீது ஏற்றி தாக்குதல் நடத்தினர். அதுபோன்ற தாக்குதலை நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர்’’ என்றனர்.

அன்சர்-உல்-கலிபா-கேஎல் என பெயரிடப்பட்ட இந்த குழுவினர் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள், அகமதியா பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆகியோரை கொல்லவும் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.

ஐஸ் தீவிரவாத குழுவில் சேர்வதற்கு டெலிகிராமில் ‘தி கேட்’, ‘பாப் அல் நூர்’ மற்றும் ‘ப்ளே கிரவுண்ட்’ என்ற குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. என்ஐஏ.வின் தீவிரகண்காணிப்பில் இவர்கள் அடையாளம் காணப்பட்டு மன்சீத், ஸ்வாலித் முகமது, ரஷீத், அலி சஃப்வான் மற்றும் ஜசிம் ஆகியோர் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கனகமாலா என்ற இடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஐஎஸ் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளவர்களிடம் இருந்து நிதி வசூலிக்கப்பட்டதை ஸ்வாலித் தெரியப்படுத்தினார். இந்த சதி தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டு என்ஐஏ நீதிமன்றத்தால் சிறைதண்டனை பெற்றனர்.

இன்னும் சில பிஎஃப்ஐ தொண்டர்கள் ஐ.எஸ் தீவிரவாத கொள்கையால் கவரப்பட்டு ஈராக் அல்லது சிரியா செல்ல முடிவெடுத்தனர். சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவர்கள் இந்தியாவிலிருந்து மலேசியா, சவுதி அரேபியா, ஈரான்அல்லது துருக்கிக்கு சென்றுள்ளனர். சிலர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து போரிட்டு உயிரழந்தனர். சிலர் துருக்கி எல்லையை கடக்கும்போது பிடிபட்டு திருப்பிஅனுப்பப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர் துருக்கி அதிகாரிகளால் இரு முறை கைது செய்யப்பட்டு திருப்பிஅனுப்பப்பட்டுள்ளார். ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்றபலர் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x