Published : 01 Oct 2022 04:45 AM
Last Updated : 01 Oct 2022 04:45 AM

குஜராத் காந்திநகரில் இருந்து மும்பை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் பயணம் தொடங்கியது - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

குஜராத் தலைநகர் காந்திநகரிலிருந்து மும்பைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்து, அதில் சிறிது தூரம் பயணம் செய்தார். அப்போது அதில் பயணம் செய்த பெண் தொழில்முனைவோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். படம்: பிடிஐ.

காந்திநகர்: குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து - மும்பைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதே ரயிலில் அவர் கலுபூர் ரயில் நிலையம் வரை பயணம் செய்தார்.

குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு பிரதமர் மோடி கடந்த 2 நாட்களாக பயணம் செய்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த சில திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

காந்திநகர் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்பற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்பூரி ஆகியோர் கலந்து கொண்டனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0 ரயிலில் உள்ள அதிநவீன வசதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். அந்த ரயிலின் இன்ஜின் கட்டுப்பாட்டு அறையையும் பிரதமர் பார்வையிட்டார். அதே ரயிலில் கலுபூர் ரயில் நிலையம் வரை பயணம் செய்த மோடி, ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர், ரயில் பயணிகளுடன் கலந்துரையாடினார். வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள், பொறியாளர் களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி அவர்களை பாராட்டினார்.

இந்த நவீன ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தை 52 வினாடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும். காந்திநகரில் இருந்து மும்பைக்கு 6 முதல் 7 மணி நேரத்துக்குள் இந்த ரயில் சென்றுவிடும். வைபை, 32 இன்ச் டி.வி போன்ற வசதிகள் இதில் உள்ளன.

அகமதாபாத் மெட்ரோ ரயில்

கலுபூர் ரயில் நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடி, ரூ.12,925 கோடி செலவில் அமைக்கப்பட்ட அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை அங்கு தொடங்கி வைத்தார். அதிலும் பயணம் செய்த பிரதமர் மோடி தால்டெஜ் என்ற இடத்தில் இறங்கி தூர்தர்ஷன் மையத்துக்கு சென்றார். அங்கு நடந்த கூட்டத்தில் அவர் நேற்று மதியம் உரையாற்றினார். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி நகருக்கு நேற்று மாலை சென்ற பிரதமர் மோடி, அங்கு ரூ.7,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். அதன்பின் அவர் அம்பாஜி கோயிலில் வழிபட்டார்.

ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட பிரதமர்

அகமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபின், ராஜ்பவன் செல்வதற்காக காந்திநகருக்கு காரில் புறப்பட்டார் பிரதமர் மோடி. அவரது வாகனத்துக்கு முன்னும், பின்னும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் சென்றன.

அப்போது அவரது வாகனத்துக்கு பின்னால் ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டது. உடனே, பிரதமர் தனது வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தச் சொன்னார். பிரதமரின் வாகனம் நின்றதும், பாதுகாப்பு படையினரின் வாகனங்களும் சாலையோரம் ஒதுங்கின. ஆம்புலன்ஸ் சென்றபின் பிரதமர் மோடியின் வாகனமும், அவரது பாதுகாப்புக்கு வந்த வாகனங்களும் மீண்டும் புறப்பட்டு சாலையின் மையப் பகுதியில் பயணித்தன. இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகளை, குஜராத் மாநில பா.ஜக ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x