Published : 30 Sep 2022 05:39 AM
Last Updated : 30 Sep 2022 05:39 AM

பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - மாயமான 15 பேரை தேடும் பணி தீவிரம்

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தின் துப்ரி நகரிலிருந்து பஷானி என்ற இடத்துக்கு பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 30 பேர், நாட்டு படகு ஒன்றில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணம் செய்தனர். அந்தப் படகில் 10 மோட்டார் சைக்கிள்களும் ஏற்றிச் செல்லப்பட்டன.

துப்ரி நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் அடாபாரி என்ற இடத்தில் உள்ள பாலத்தை, படகு கடக்க முயன்றபோது, அதன் தூண் மீது படகு மோதி கவிழ்ந்தது. இதனால் அந்த படகில் பயணம் செய்த அனைவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். சிலர் நீந்தி பாதுகாப்பாக கரையேறினர்.

தகவல் அறிந்து மாநில பேரிடர்மேலாண்மை ஆணைய குழுவினர்விரைந்தனர். ஆற்றில் தத்தளித்த 15 பேர் மீட்கப்பட்டனர். படகில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்யாரும் இதுவரை மீட்கப்படவில்லை. மாயமான 15 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. துப்ரி மாவட்ட வட்டார அதிகாரி சன்ஜூ தாஸ் என்பவர், நில ஆவண அதிகாரி மற்றும் ஒரு ஊழியருடன் அந்த படகில் பயணம் செய்தார். இவர்களில் சன்ஜூதாஸை காணவில்லை. இந்த விபத்து குறித்து அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தலைமை செயல் அதிகாரி ஞானேந்திர தேவ் திரிபாதி கூறுகையில், ‘‘துப்ரி மாவட்டத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் நாட்டு படகு ஒன்று கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x