Published : 18 Nov 2016 09:29 PM
Last Updated : 18 Nov 2016 09:29 PM
நிராகரிக்கப்பட்ட 43 நீதிபதிகள் நியமனத்தை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான கோப்பு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையே முரண்பாடான நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த வாரம் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘கொலீஜியம்’ பரிந்துரைத்த 77 பேர் பட்டியலில் 34 பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீதியுள்ள 43 பெயர்களை மறுபரிசீலனை செய்யக் கோரி திருப்பி அனுப்பியுள்ளோம்’ என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி அனில் ஆர்.தவே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கியிடம், ‘நீதிபதிகள் நியமன விவகாரத்தில் 43 பேர் நியமனத்தை நிராகரித்த மத்திய அரசின் முடிவை ‘கொலீஜியம்’ ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், அந்த 43 பேரையும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசுக்கு கோப்பு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதற்கு முகுல் ரோத்கி, அதுபற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது என்று கூறினார். மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட நீதிபதிகள் நியமன பட்டியலை உச்சநீதிமன்றம் திருப்பி அனுப்பி வைத்தால், அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT