Published : 28 Sep 2022 04:42 AM
Last Updated : 28 Sep 2022 04:42 AM

பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மிகப்பெரிய மோசடி - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கருத்து

கொச்சி: பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மிகப்பெரிய மோசடி என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பத்து சதவீத இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் கேரளாவை சேர்ந்த மறைந்த பழங்குடியின பெண் தலைவர் தாட்சாயிணி வேலாயுதத்தின் நினைவு கருத்தரங்கம் கொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, 10 சதவீத இடஒதுக்கீட்டை விமர்சித்தார். அவர் கூறியதாவது:

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக அரசியல் சாசனத்தில் 103-வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது அரசமைப்பு சாசனத்துக்கு எதிரான மிகப்பெரிய மோசடியாகும். இதை ஆதரிக்க முடியாது. சமூக நீதிக்கு தடை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் சுமார் 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக உயர் வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்திய அரசமைப்பு சாசனம் உருவாக்கப்பட்டபோது உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

பத்து சதவீத இடஒதுக்கீட்டுக்கான வருமான உச்ச வரம்பை பார்க்கும்போது பின்தங்கிய, நலிவுற்ற பிரிவினருக்காக வழங்கப்பட்ட இடஒதுக்கீடாக தெரியவில்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு என்று கூறினால், எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர் இந்த பிரிவில் ஏன் சேர்க்கப்படவில்லை.

நீதித்துறையில் பெண்கள், சிறுபான்மையினர், எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இந்த பிரிவுகளை சேர்ந்தோருக்கு தகுதி இருந்தும் உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

அரசமைப்பு சாசனம் அமலுக்கு வந்து 72 ஆண்டுகளுக்கு மேலாகியும் நீதித்துறையில் இப்போதும் உயர் வகுப்பினரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மற்ற சமுதாயத்தினர், சிறுபான்மையினர், பெண்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். இதன்காரணமாக பல்வேறு கொள்கை முடிவுகள் எதிர்மறையாக உள்ளன. பாலின சமநிலை, சமூக நீதி உறுதி செய்யப்படாததால் பல்வேறு கொள்கை முடிவுகள் தவறாக அமைகின்றன.

உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்களுக்கு கொலிஜியம் நடைமுறையில் நீதிபதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ரகசிய நடைமுறையால் கொலிஜியம் மற்றும் அரசு தரப்பில் சிலர் நீதிபதி பதவிகளை பெறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x