Published : 27 Sep 2022 05:19 AM
Last Updated : 27 Sep 2022 05:19 AM

ரூ.200 கோடி மோசடி வழக்கு - நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமீன்

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

புதுடெல்லி: ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். முக்கிய பிரமுகர்களை தெரியும் என்று கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் சுகேஷ் சந்திரசேகர்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது.

மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களையும் பெற்றுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், சுகேஷ் சந்திரசேகரை நடிகை ஜாக்குலினுக்கு அறிமுகம்செய்துவைத்த பிங்கி இரானிஎன்பவர் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடிகை ஜாக்குலின், பிங்கி இராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் விசாரணைக்கு ஆஜராகி, போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தனர்.

விசாரணையின் முடிவில் நடிகை ஜாக்குலின் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில், ஜாக்குலின் மீதான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அவருக்கு முன்ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் குழு மனுவை தாக்கல் செய்தது. மனுவை பரிசீலனை செய்த நீதிபதி ஷைலேந்திர மாலிக், ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 22-ம் தேதிக்கு அவர் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x