Published : 25 Sep 2022 06:03 PM
Last Updated : 25 Sep 2022 06:03 PM

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தகவல்

பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி: சண்டிகர் விமான நிலையத்திற்கு இனி உயிர்த்தியாகி பகத் சிங்கின் பெயர் சூட்டப்படும். இது மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று. சண்டிகர், பஞ்சாப், ஹரியாணா, இன்னும் தேசத்தின் அனைத்து மக்களுக்கும் இந்த தீர்மானத்தின் பொருட்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிறான இன்று (செப்.25) பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், " வேங்கையைக் காணும் சந்தர்ப்பம் எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது தான், பெரும்பாலான மக்களிடம் வந்துள்ள ஒரு பொதுவான கேள்வியாக இருக்கிறது. வேங்கையை தயார்படுத்த பணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் சூழலுக்கேற்ப, இந்த வேங்கைகள் தங்களை எப்படி தகவமைத்துக் கொள்கின்றன என்பதை இந்தப் பணிக்குழு கண்காணிக்கும். இதனடிப்படையில் சில மாதங்கள் கழித்து ஒரு முடிவு எடுக்கப்படும், அப்போது நீங்கள் வேங்கைகளைப் பார்க்கலாம்.

இதன் பொருட்டு மைகவ் (mygov) தளத்திலே, ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வேங்கைகள் தொடர்பாக நடக்கும் இந்த இயக்கத்தின் பெயர் என்னவாக இருக்க வேண்டும்? இந்த வேங்கைகளுக்குப் பெயர் சூட்டுவது குறித்து ஆலோசனைகளை அளிக்கலாம். இந்தப் பெயர்களும் பாரம்பரியமானவையாக இருந்தால் நன்றாக இருக்கும்; ஏனென்றால், நம்முடைய சமூகம், நமது கலாச்சாரம்-பாரம்பரியம்-மரபோடு தொடர்புடைய எந்த ஒரு விஷயமும், இயல்பாகவே அவற்றை நோக்கி நம்மைக் கவர்கின்றன. நீங்கள் இந்தப் போட்டியில் கண்டிப்பாகப் பங்கெடுங்கள் உங்கள் வெற்றியின் பரிசாக வேங்கையைக் காணக்கூடிய முதல் சந்தர்ப்பம் உங்களுக்கே கூட அமையலாம், யாரறிவார்கள்?

செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று அமுதப் பெருவிழாவின் ஒரு விசேஷமான நாள் வரவிருக்கிறது. இந்த நாளன்று தான் நாம் பாரத அன்னையின் வீரம்நிறைந்த சத்புத்திரனான பகத் சிங்குடைய பிறந்த நாளைக் கொண்டாடுவோம். பகத் சிங்கின் பிறந்த நாளுக்கு சற்று முன்பாக, அவருக்கு சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணிக்கும் பொருட்டு ஒரு மகத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது. சண்டிகர் விமான நிலையத்திற்கு இனி உயிர்த்தியாகி பகத் சிங்கின் பெயர் சூட்டப்படும். இது மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று.சண்டிகர், பஞ்சாப், ஹரியாணா, இன்னும் தேசத்தின் அனைத்து மக்களுக்கும் இந்தத் தீர்மானத்தின் பொருட்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

தியாகிகளின் நினைவிடங்கள், அவர்களின் பெயரில் இருக்கும் இடங்கள், அமைப்புக்களின் பெயர்கள் ஆகியன, நமது கடமைகள் குறித்து நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. சில நாட்கள் முன்பாகத் தான் தேசம், கர்த்தவ்ய பத்தில் நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் உருவச்சிலையை நிறுவியதன் வாயிலாகவும் கூட, இதே போன்றதொரு முயற்சியைச் செய்தது; இப்போது உயிர்த்தியாகி பகத் சிங்கின் பெயரை சண்டிகர் விமான நிலையத்திற்குச் சூட்டியதும் கூட இதே திசையில் வைக்கப்பட்ட மேலும் ஒரு முன்னேற்றப்படி.

இந்தியா சுமார் 7500 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீண்ட கடற்கரை காரணமாக, கடலோடு நம்முடைய தொடர்பு இணைபிரியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. இந்த கரையோரப் பகுதிகளின் சுற்றுச்சூழலோடு தொடர்புடைய பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். சூழலியல் மாற்றம், கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அபாயமாக ஒரு புறம் ஆகி வருகிறது என்றால், நமது கடற்கரைகளில் பரவியிருக்கும் மாசு பிரச்சனையாகி இருக்கிறது. இந்தச் சவால்கள் குறித்துத் தீவிரமான, நிரந்தரமான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பது நமது கடமையாகிறது" என்று பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x