

ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் விவகாரத்தில் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்வதாக மத்திய அமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால், நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடும் சில்லறை தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்றத் திலும் இந்தப் பிரச்சினையை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற் காக பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவாக இருக்கிறார்கள்.
அதேநேரம், குறைவான மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் சில பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.
பொதுமக்களின் நலனுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத் திருப்பதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். எந்த அரசும் அவ்வாறு செய்யாது. அவ்வாறு மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவிட்டு வாக்கு கேட்பதற்காக அவர்களிடம் எப்படி செல்ல முடியும்?
இந்த விவகாரத்தில் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. இது தேவையற்றது. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது தங்கள் தரப்பில் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை என்பதை உணர்ந்த காங்கிரஸ், பிரதமர் மோடி ஆஜராக வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.