செங்கோட்டை தாக்குதல்: தீவிரவாதி தூக்கு நிறுத்திவைப்பு

செங்கோட்டை தாக்குதல்: தீவிரவாதி தூக்கு நிறுத்திவைப்பு
Updated on
1 min read

டெல்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய லஷ்கர் தீவிரவாதி முகமது ஆரிப் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

செங்கோட்டையில் 2000 டிசம்பர், 22-ம் தேதி ஆறு லஷ்கர் - இ – தொய்பா தீவிரவாதிகள் நுழைந்து ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு வீரர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தீவிரவாதி முகமது ஆரிபுக்கு 2005-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன. மேல்முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆரிபை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, மதன் லோக்கூர், குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர் திரிபுரதி ராய் ஆஜராகி, "ஆரிப் 14 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டார். அவரை இனிமேல் தூக்கிலிடுவது அரசியல் சாசனத்தை மீறிய செயல்" என்று வாதிட்டார்.

தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்த நீதிபதிகள், இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in