Last Updated : 04 Nov, 2016 08:56 PM

 

Published : 04 Nov 2016 08:56 PM
Last Updated : 04 Nov 2016 08:56 PM

பதிவை புதுப்பிக்க தவறியதால் 11 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து

பதிவை புதுப்பிக்க தவறியதால் 11 ஆயிரம் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து இந்நிறுவனங்கள் அன்பளிப்புகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் (எப்சிஆர்ஏ), அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அரசிடம் பதிவு செய்து கொள்கின்றன. அந்தப் பதிவை அவ்வப்போது மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு பதிவை புதுப்பிப்பதற்கான கடைசி தேதி கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதியுடன் முடிந்து விட்டது. அதுவரை பதிவைப் புதுப்பிக்க விண்ணப்பிக்காத தொண்டு நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்படி, பதிவை புதுப்பிக்காத 11,319 நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் செல்லத்தக்க காலம் கடந்த 1-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. இதில் 50 அநாதை இல்லங்கள், நூற்றுக்கணக்கான பள்ளிகளும் அடங்கும்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு எப்சிஆர்ஏ சட்டத்தின் கீழ், 3 ஆண்டுகளாக தொடர்ந்து வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்காத 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து அன்பளிப்புப் பெறும் நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் 42,500-ல் இருந்து 20,500 ஆக குறைந்துள்ளது.

தற்போது 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து அன்பளிப்பு தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x