Published : 21 Sep 2022 11:56 AM
Last Updated : 21 Sep 2022 11:56 AM

நீண்ட காலமாக அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் இருக்கும் சமூக விலக்கு வழக்கு: விரைவில் முடிவு 

புதுடெல்லி: தாவூதி போரா சமூகத்தின் "சமூக விலக்கு" நடைமுறை குறித்த வழக்கின் இறுதி விசாரணை அக்.11ம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இதன்மூலம், நீண்ட காலமாக அரசியல் சாசன அமர்வில் நிலைவியிலுள்ள இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு, 1986ம் ஆண்டின் இந்த வழக்கை அக்.11ம் தேதி இறுதி விசாரணைக்காக ஒத்திவைத்து வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும், தாவூதி போரா சமூகத்தினரின் விலக்கி வைக்கும் நடைமுறையை ஒரு பாதுகாக்கப்பட்ட நடைமுறையாக தொடர முடியுமா என்று அறிக்கையையும், தற்போதைய சட்ட ஒழுங்கு நடைமுறையையும் குறித்து எழுத்துப்பூர்வமான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டனர்.

கடந்த 2005- ம் ஆண்டு இந்த சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கும் நடைமுறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் மீது செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையில், இந்த வழக்கினை 9 நபர் அடங்கி அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும், சபரிமலை வழக்கு போல, மத நடைமுறைகள் தொடர்பான நீதித்துறையின் மறுஆய்வு தொடர்பான பல்வேறு சிக்கல்களை இந்த வழக்கு உள்ளடக்கி உள்ளது என்று மகாராஷ்டிரா அரசு வாதிட்டது.

தாவூதி போரா சமூகத்தின் தலைவரான 53-வது சையத்னா," இந்த வழக்கின் அனைத்து சர்ச்சைகளும் 1949ம் ஆண்டு பாம்பே சமூகவிலக்குத் தடுப்புச் சட்டத்தை சுற்றியே உள்ளது. இந்த சட்டத்தினை மகாராஷ்டிரா அரசு 2017ம் ஆண்டே ரத்து செய்துவிட்டதால், எந்த நடவடிக்கையும் செல்லாது என்று வாதிட்டார்.

சையத்னா சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ் நரிமன், மகாராஷ்டிரா அரசின் சமூக புறக்கணிப்பிலிருந்து மக்களை (பாதுகாப்பு, தடுப்பு மற்றும் தீர்வு) பாதுகாக்கும் 2017ம் ஆண்டு சட்டம் இந்த மனுவினை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.

புதிய சட்டம், 1949 ஆம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்ததோடு மட்டும் இல்லாமல், சமூக விலக்கு உள்ளிட்ட அனைத்து வகையான புறக்கணிப்புகளையும் சட்டவிரோதமாக்கியது என்று சுட்டிக்காட்டினார்.

மனுதாரர்கள் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர், சித்தார்த் பட்நாயக், சமூக விலக்கு குறித்த மகாராஷ்டிராவிற்கான பொது சட்டம், சமூக விலக்கை கடைபிடிக்கும் தாவூதி போரா சமூகத்தினரை பாதுகாக்காது என்றும், அந்த சமூகத்தைச் சேர்ந்த மதத்தலைவர்கள், உச்ச நீதிமன்றத்தின் 1962ம் ஆண்டின் தீர்ப்பின்படி சமூக விலக்கை கடைபிடிக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நரிமன், எந்தவித எழுத்துப்பூர்வமான அறிக்கையும் தரமுடியாது என மறுத்ததுடன் வழக்கை அக்.11 அன்று விசாரிக்க வேண்டும் என்றார்.

வழக்கின் பின்புலம்: சமூக விலக்கு விவகாரத்தில் தாவூதி போரா சமூகத்தின் சட்டப்போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. கடந்த 1949ம் ஆண்டு, அப்போதைய பாம்பே அரசு, சமூக விலக்குத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இதனை எதிர்த்து அப்போதைய தாவூதி போரா சமூகத்தின் தலைவர் 51வது சையத்னா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், "சமூக விலக்கு" தங்களது பிரிவினரின் நிர்வாக அதிகாரங்களில் ஒன்று என்று தெரிவித்திருந்தார். 1962ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 1949ம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்தது.

இந்த தீர்ப்பு வந்து 25 ஆண்டுகளுக்கு பின்னர், 1986ம் ஆண்டு தாவூதி போரா சமூகத்தின் சீர்திருத்தவாதிகளாக கருதப்படும் தாவூதி போரா சமூக வாரியம், ரிட் மனு ஒன்றினை தாக்கல் செய்தது. அந்த மனுவில், சில குடும்பங்களால் குற்றம் சாட்டப்படும் சமூகவிலக்கு உண்மையா என்பதைக் கண்டறிய கடந்த 1977-ம் ஆண்ட நீதிபதி நரேந்திர நத்வானி தலைமையிலான ஆணையத்தின் கண்டுபிடிப்புகளை சுட்டிக்காட்டியிருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு நரேந்திர நத்வானி ஆணையம், சமர்ப்பித்த அறிக்கையில் குற்றச்சாட்டு பொய் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும், சமூக விலக்கை சட்டவிரோதமாக மாற்றவேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

கடந்த 1994- ல் இந்த விவாகரம் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது. ஆனால், 2004-ல் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட வேண்டுமா இல்லையா என்பதை முதலில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x