Published : 31 Jan 2014 12:00 AM
Last Updated : 31 Jan 2014 12:00 AM

காங். எதிர்ப்பு தமிழகத்துக்குள் முடங்கிவிடக்கூடாது: வைகோவுக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

டெல்லியில் தன்னைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம், “உங்களின் காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரம் இந்தியா முழுக்க நடக்கவேண்டும்” என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வியாழனன்று டெல்லியில் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் வைகோ. அந்தச் சந்திப்பின் போது, ‘மதிமுகவை நம்பிக்கைக்குரிய கட்சியாகப் பார்க்கிறது பாஜக. காங்கிரஸை வேரறுக்க வேண்டும் என நீங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருவது எங்களுக்குத் தெரியும். உங்களுடைய காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் தமிழகத்துக்குள் முடங்கி விடக்கூடாது. இந்தியா முழுக்க எதிரொலிக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. எனவே தமிழகத்துக்கு வெளியே முக்கியமான பத்து மாநிலத் தலைநகரங்களில் நீங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு வைகோ தனது சம்மதத்தை தெரிவித்தி ருப்பதாகவும் மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் வைகோ தன்னை சந்தித்தது தொடர்பான போட்டோக்களை உடனடியாக ராஜ்நாத் சிங் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். வியாழன் இரவு ஏழு மணி வரை, அந்தப் பக்கத்திற்கு சுமார் 50 ஆயிரம் பேர் லைக் கொடுத்திருந்ததுடன், ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்கள் தங்களின் கருத்துக்களையும் பதிவு செய்திருந்தார்கள்.

இந்நிலையில் அடுத்த மாதம் சென்னையில் மோடி கலந்துகொள்ளும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை பாஜகவுடன் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தி முடிக்க மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் ஐவர் குழு ஒன்றையும் அமைத்திருக்கிறார் வைகோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x