Published : 19 Sep 2022 10:36 AM
Last Updated : 19 Sep 2022 10:36 AM

"தீமைகளை அழிக்க கடவுள் ஆம் ஆத்மி கட்சியைப் படைத்தார்" - அரவிந்த் கேஜ்ரிவால்

அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: தீமையை ஒழிக்க கிருஷ்ணரை அனுப்பியது போல, ஊழல், பணவீக்கம், வேலைவாய்ப்பு இல்லாமை போன்றவைகளில் இருந்தும், அரசியலைமைப்பையும் நாட்டையும் பாதுகாக்க கடவுள் ஆம் ஆத்மி கட்சியை படைத்திருக்கிறார் என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முதல் தேசிய கூட்டம் நடந்தது. குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் வர இருக்கும் நிலையில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், 20 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 1,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "பத்து வருடங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கும் போது, இந்த இந்திராகாந்தி மைதானமே நிரம்பும் அளவிற்கு கட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வருவார்கள் என்று நினைக்கவில்லை. தீமைகளை அழிக்க கிருஷ்ணர் அனுப்பப்பட்டது போல, ஊழல், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, போன்றவைககளில் இருந்தும், அரசியலமைப்பு மற்றும் நாட்டை தீமைகளிடமிருந்து காப்பாற்றவும் கடவுள் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கியுள்ளார்.

கடந்த 1949, நவ.25-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்க்கொள்ளப்பட்டதிலிருந்து 60 ஆண்டுகளாக காங்கிரஸூம் பாஜவும் நாட்டை சீரழித்து உள்ளன. அதனால், கடவுள் தலையிட்டு 2012ல் நாட்டையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கினார். இது தற்செயலான நிகழ்வு இல்லை. கடவுள் நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். அதனை மனதில் வைத்து வளர்ச்சிகாக பாடுபடவேண்டும்.

75 ஆண்டுகளுக்கு முன்பு, வெள்ளையர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற அனைவரும் ஒன்றிணைந்தனர். தற்போது இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாடுமுழுவதும் ஆம் ஆத்மி கட்சி விதைகளைத் தூவி வருகிறது. விரைவில் அது டெல்லி பஞ்சாப்பைப் போல பெரிய மரமாக வளர்ந்து நிற்கும்.

ஆம் ஆத்மி கட்சியின் நேர்மை மற்றும் கொள்கைகளை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆம் ஆத்மி கட்சி தேசிய அரசியலில் அறிமுகப்படுத்தியுள்ள கல்வி, சுகாதார வசதிகள், திட்டங்கள், இலவசங்களை அவர்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அதனால் இலவசங்களை இனிப்பு ரொட்டிகள் என்றும் இலவசங்களால் அரசுக்கு சுமை கூடும் என்றும் கூறுகின்றனர். குஜராத் அரசுக்கு 3.5 லட்சம் கோடி கடன் உள்ளது. எந்த இலவசங்களையும் கொடுக்காத குஜராத்திற்கு ஏன் அவ்வளவு கடன் வந்தது.

பாஜக தனது ஆப்ரேஷன் தாமரையின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி உள்ளது. நமது எம்எல்ஏகள் பலரிடம் ரூ.25 கோடி தருவதாக மீண்டும் பேரம் பேசப்பட்டுள்ளது. அவர்கள் பாஜகவில் இணையவில்லை என்றால், அமனத்துல்லா கானைபோல கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டி உள்ளனர். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் விடுதலைப் போரட்ட வீரர்கள் தான். அவர்கள் எதிராளிகளின் ரூபாய் 25 கோடி பேரத்திற்கு செவி கொடுக்காமல், சிபிஐ அமலாக்கத்துறைகளின் சோதனைகளைச் சந்தித்து வருகின்றனர். அவர்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள். பின்னர் செங்கோட்டையில் நின்று ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறுகின்றனர்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x