Published : 26 Jul 2014 08:50 AM
Last Updated : 26 Jul 2014 08:50 AM

ஆசிட் வீச்சு: அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் அதிருப்தி அடைந்துள்ள உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் சிகிச்சை வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

ஆசிட் (அமிலம்) வீச்சு சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் இழப்பீடு அளிப்பது குறித்து பிஹாரைச் சேர்ந்த பரிவர்தன் கேந்திரா என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக மேலும் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இம்மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆசிட் வீச்சு சம்பவங்களை தடுக்க உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும் இச்சம்பவங்கள் குறையவில்லை, பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் இழப்பீடுகளும் வழங்கப்படுவதில்லை என்று வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டினர்.

18 வயதுக்கு குறைந்த யாருக்கும் ஆசிட் விற்பனை செய்யக் கூடாது. புகைப்படம் மற்றும் முகவரியுடன் கூடிய அடையாள அட்டை இருப்பவருக்கு மட்டுமே ஆசிட் விற்பனை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இதில், அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட 15 நாட்களுக்குள் ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவ சிகிச்சை அளிக்கவும், ஆசிட் வீச்சு சம்பவங்களைதடுக்கவும் மாநில அரசுகள் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதற்காக, கடந்த மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து இச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன என்று நீதிபதிகளிடம் வழக்கறிஞர்கள் எடுத்துக் கூறினர். இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதிகள் ஆசிட் வீச்சு சம்பவங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அரசு தரப்பில் சுணக்கம் காட்டுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். இம்மனுக்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கொலின் கொன்சால்வஸ் கூறும்போது, ‘ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண் குறைந்தபட்சம் 10 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு ரூ.10 லட்சம் வரை தேவைப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக இழப்பீடு வழங்கப்படுவதில்லை. தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற வசதி, இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்தும் முறையிட்டுள்ளோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x