Published : 16 Sep 2022 06:52 AM
Last Updated : 16 Sep 2022 06:52 AM

லக்கிம்பூர் கேரியில் தலித் சகோதரிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை - உ.பி போலீஸ் நடவடிக்கை என்ன?

லகிம்பூர் கேரி: உத்தர பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் தலித் சகோதரிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவருடைய வீட்டுக்கு அருகில் வசிப்பவர் சோட்டு. இவர் சுகைல், ஜூனைத் என்ற இரு வாலிபர்களுக்கு சகோதரிகளை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் சகோதரிகள் இருவரையும், சுகைல் மற்றும் ஜூனைத் ஆகியோர் தங்கள் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களுடன் ஹபிசுல் ரகுமான் என்பவரும் சென்றுள்ளார். சகோதரிகள் இருவரையும், சுகைல் மற்றும் ஜூனைத் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பின் அவர்களை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

தடயங்களை மறைக்க சுகைல் மற்றும் ஜூனைத் ஆகியோர் தங்களின் நண்பர்கள் கரிமுதீன் மற்றும் ஆரிப் ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளனர். பின்னர் இருவரது உடல்களை மரத்தில் தூக்கில் தொங்குவது போல் துப்பட்டாவில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

இதைப் பார்த்த கிராமத்தினர் ஆத்திரம் அடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பின் போலீஸார் வந்து உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சகோதரிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், ‘‘சகோதரிகள் இருவரும் சுகைல் மற்றும் ஜூனைத்துடன் நட்புடன் பழகியுள்ளனர். அவர்கள் சுகைல் மற்றும் ஜூனைத்துடன் இருசக்கர வாகனத்தில் கரும்புத் தோட்டத்துக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். சுகைல், ஜூனைத் ஆகியோரை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என சகோதரிகள் வற்புறுத்தியதால், இளைஞர்கள் இருவரும் சகோதரிகளை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். தடயங்களை மறைப்பதற்காக இவர்கள் தங்களின் நண்பர்கள் கரிமுதீன் மற்றும் ஆரிப் ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளனர்’’ என்றனர்.

போலீஸார் மேலும் கூறுகையில், ‘‘சாலைகளில் 1,000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாங்கள் இந்த வழக்கை மிகவும் கவனத்துடன் விசாரித்து குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்’’ என்றனர். இந்த குற்றத்தில் தொடர்புடைய 6 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேசம் பாதூன் பகுதியில் இரு பெண்கள் இதே போன்று பாலியல் வன்கொடுமை செய்து அவர்களது உடல்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டது கடந்த 2014-ம் ஆண்டு நடந்தது. லக்கிம்பூர் கேரி சம்பவம், பாதூன் சம்பவத்தை நினைவுபடுத்துவது போல் உள்ளது.

உத்தர பிரதேசத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லாததே, இச்சம்பவத்துக்கு காரணம் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இறுதிச் சடங்கு

பாலியியல் வன்கொடுமை செய்து கொன்றவர்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இச்சம்பவத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அதுவரை கொலை செய்யப்பட்ட சகோதரிகளுக்கு இறுதி சடங்கு செய்ய மாட்டோம் என அவர்களது குடும்பத்தினர் கூறியிருந்தனர். அரசிடம் இருந்து நிதியுதவி பெற்றுத் தருவதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தர பிரதேச அதிகாரிகள் உறுதி அளித்தபின், கொலை செய்யப்பட்ட சகோதரிகளின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்ய அவர்களது குடும்பத்தினர் சம்மதித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x