Published : 15 Sep 2022 03:57 AM
Last Updated : 15 Sep 2022 03:57 AM

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுடெல்லி: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்தார்.

தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தச் சூழலில், கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான பல்வேறு காரணங்களையும் தெரிவித்திருந்தார்.

பிரதமருக்கு அவர் எழுதியிருந்த கடிதத்தில், ‘நரிக்குறவர்கள் சமூகம், மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களில் ஒன்று. பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெற தகுதியுடையவர்களாவர். இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறியதாவது:

தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமுதாயத்தினரை சேர்க்க அனுமதி வழங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து பழங்குடியினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இனி நரிக்குறவர், குருவிக்காரர், ஹட்டி, பிரிஜியா சமூகத்தினருக்கும் கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் ஹட்டி சமூகத்தைச் சேர்ந்த 1.60 லட்சம் மக்கள் பயனடைவர். ஹட்டி இனமக்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் உள்ளனர். அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிக அளவில் உள்ள பிரிஜியா இனத்தவரும் பயனடைவர். தமிழகத்தில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தவர்களும் இதன்மூலம் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

நலத் திட்டங்கள்

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தை சேர்ப்பதற்கான மசோதா சட்டமாக இயற்றப்படும். அதன்பிறகு, தமிழகத்தின் திருத்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள், மத்திய அரசின் தற்போதைய நலத் திட்டங்களின் பயன்களை பெற முடியும்.

மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய கல்வி உதவித்தொகை, வெளிநாடுகளில் படிப்பதற்கான தேசிய கல்வி உதவித்தொகை, தேசிய ஆய்வு உதவித்தொகை, உயர்தரக் கல்வி, தேசிய ஷெட்யூல்டு பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்திடம் இருந்து சலுகை கடன்கள், ஷெட்யூல்டு பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவியருக்கான விடுதிகள் போன்ற திட்டங்கள் மூலம் இந்த இனத்தவர் பயன்பெற முடியும். மேலும், மத்திய அரசு கொள்கையின்படி, அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பயன்களையும் இவர்கள் பெறமுடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x